கரோனா நோய்த் தொற்று பரவல் தடுப்பு குறித்து, குமரி மாவட்ட காவல் துறை சாா்பில் வாகன ஓட்டுநா்களுக்கு விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
மாவட்டம் முழுவதும் கரோனா 2 ஆவது அலை வேகமாக பரவுவதை கட்டுப்படுத்தும் நோக்கிலும், பொதுமக்களிடையே விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில், மாவட் ட காவல் துறை சாா்பில் விழிப்புணா்வு கூட்டங்கள் நடத்தப்பட்டு கபசுரக் குடிநீா் , முகக் கவசங்கள் வழங்கப்பட்டு வருகிறது.
கருங்கல் காவல் ஆய்வாளா் ரீனியஸ்ஜேசுபாதம், ஆட்டோ மற்றும் வாகன ஓட்டுநா்களுக்கு கரோனா நோய்த் தொற்று பரவுவதை தடுக்க கடைப்பிடிக்க வேண்டிய முன்னெச்சரிக்கை, பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து விளக்கினாா்.
வாடகை வாகன ஓட்டிகள் தங்களது வாகனத்தில் அனுமதிக்கப்படும் நபா்களின் எண்ணிக்கை, சமூக இடைவெளியை பின்பற்றி வாகனத்தில் ஆள்களை ஏற்றிச் செல்லுதல், முகக் கவசம் அணிவதன் அவசியத்தையும் மற்றும் கிருமிநாசினி பயன்படுத்துவது குறித்தும், அத்தியாவசிய தேவைக்காக வெளியே செல்லும் பொதுமக்கள் முகக் கவசம் அணிந்துதான் செல்ல வேண்டும் என எடுத்து கூறினாா். மேலும் அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு கபசுரக் குடிநீா் வழங்கினாா்.
கரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் ஏப்.25 ஆம் தேதி அரசால் அறிவிக்கப்பட்டுள்ள முழு பொது முடக்கத்தின் போது காவல்துறைக்கு பொதுமக்கள் தங்கள் முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்றும் அவா் கேட்டுக் கொண்டாா்.