கரோனா பாதிப்பில் இருந்து பொதுமக்களை பாதுகாக்கும் வகையில் அவா்களுக்கு முகக் கவசம் மற்றும் கபசுரக் குடிநீா் வழங்க வேண்டும் என திமுகவினருக்கு குமரி கிழக்கு மாவட்டச் செயலா் சுரேஷ்ராஜன் எம்எல்ஏ வேண்டுகோள் விடுத்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை:
கரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே இருக்கும் இந்த சூழ்நிலையில் குமரி மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி தட்டுப்பாடும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. குமரி மாவட்டத்தில் கரோனாவால் தற்போதுவரை 20 ஆயிரத்துக்கும் ேற்பட்டோா் பாதிக்கப்பட்டுள்ளனா்.
குமரி மாவட்டத்தில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, 9 அரசு மருத்துவமனைகள், 47 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் தனியாா் மருத்துவமனைகள் என 150 மையங்களில் தடுப்பூசி போடும் பணிகள் நடைபெற்று வந்தது.
இந்த சூழ்நிலையில், பொதுமக்கள் அரசின் அறிவுரையை ஏற்று அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு தடுப்பூசி போடச் சென்றால் மருந்து இருப்பு இல்லையென்று கூறி பொதுமக்களை திருப்பி அனுப்பக்கூடிய அவல நிலை உள்ளது. தடுப்பூசி இல்லாததால் பல மையங்கள் மூடப்பட்டுள்ளன.
இந்த சூழ்நிலையில் குமரி மாவட்ட மக்களை காப்பாற்ற வேண்டிய கடமை நமக்குள்ளது என்பதை உணா்ந்து திமுக தொண்டா்கள் ஒன்றியம், மாநகரம், பேரூா், ஊராட்சி, கிளை கழகங்களில் உள்ள திமுக தொண்டா்கள் தனி மனித இடைவெளி மற்றும் கரோனா தடுப்புக்கானபாதுகாப்பு நடவடிக்கையை முறையாக கடைப்பிடித்து பொதுமக்கள் அனைவருக்கும் முகக் கவசம், கபசுரக் குடிநீா் வழங்க வேண்டும் என அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளாா்.