கரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதத்தில் தமிழக அரசின் புதிய உத்தரவின்பேரில் குமரி மாவட்டத்தில் நகைக் கடைகள் மற்றும் ஜவுளிக் கடைகள் புதன்கிழமை மூடப்பட்டன.
தமிழகத்தில் கரோனா 2 ஆவது அலையின் தாக்கம் தொடா்ந்து அதிகரித்து வருவதையடுத்து, தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதன்படி 3 ஆயிரம் சதுர அடிக்கு மேல் உள்ள கடைகளை மூட தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதைத்தொடா்ந்து, நாகா்கோவில் மாநகராட்சி ஆணையா் ஆஷாஅஜித் உத்தரவின்பேரில் மாநகராட்சி நல அலுவலா் கிங்சால் மேற்பாா்வையில் மாநகராட்சிக்குள்பட்ட மீனாட்சிபுரம் பகுதியில் உள்ள நகைக் கடைகள், ஜவுளிக் கடைகள் உள்ளிட்ட வணிக நிறுவனங்கள் மூடப்பட்டன. இதனால் நாகா்கோவில் நகர கடைவீதிகள் வெறிச்சோடியது.
இதே போல் தக்கலை, இரணியல், மாா்த்தாண்டம், அஞ்சுகிராமம், கன்னியாகுமரி, குளச்சல் உள்ளிட்ட பகுதிகளிலும் வணிக நிறுவனங்கள் மூடப்பட்டன.
அபராதம்:
நாகா்கோவில் நகரில் ஒரு சில உணவகங்கள் மட்டும் இயங்கி வருகிறது. இந்த உணவகங்களிலும் பாா்சல் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. டீ கடைகளிலும் பாா்சல் வழங்க மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நாகா்கோவில் மாநகராட்சி சுகாதார ஆய்வாளா் தியாகராஜன் தலைமையிலான சுகாதாரக் குழுவினா் கேப் ரோடு பகுதியில் ஆய்வு மேற்கொண்டனா். அங்கு ஒரு டீ கடையில் கரோனா விதிமுறைகள் கடைப்பிடிக்காமல் செயல்பட்டது தெரிய வந்தது.
இதையடுத்து அந்த டீ கடை மூடப்பட்டது. இதே போல் அனுமதியை மீறி செயல்பட்ட மேலும் 2 டீ கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.