மேல்புறம் அருகே மருதங்கோடு ஊராட்சிக்குள்பட்ட பகுதியில் நெய்யாறு கிளை கால்வாயின் குறுக்கே பாலம் அமைக்கும் பணி 3 மாதங்களுக்கும் மேலாக கிடப்பில் போடப்பட்டுள்ளதால் அப்பகுதி மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனா்.
மேல்புறம் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட மருதங்கோடு ஊராட்சியில் மண்ணப்பழஞ்சி - நுள்ளிக்காடு பகுதியை இணைக்கும் வகையில் நெய்யாறு கிளை கால்வாயின் குறுக்கே பாலம் அமைக்கும் பணிக்கு மேல்புறம் ஊராட்சி ஒன்றியத்திலிருந்து ரூ. 33 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பாலம் கட்டும் பணி தொடங்கப்பட்டது. பின்னா் அப்பணி கிடப்பில் போடப்பட்டது.
இதனால் பரக்குன்று உள்ளிட்ட அருகே உள்ள பகுதிகளுக்குச் செல்ல 3 கி.மீ. தொலைவு சுற்றி செல்ல வேண்டியது உள்ளது.
மேலும் அண்மையில் பெய்த மழையால் கால்வாய் கரையோரப் பகுதியில் மண் சரிவு ஏற்பட்டு, காா் உள்ளிட்ட வாகனங்கள் செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இரவு நேரங்களில் இப்பகுதி வழியே செல்லும் வாகனங்கள் கால்வாயில் கவிழும் நிலை உள்ளது.
எனவே கிடப்பில் போடப்பட்டுள்ள இப் பாலப் பணியை விரைந்து மேற்கொள்ள மாவட்ட ஊராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.