பொதுத்துறை வங்கிகளை தனியாா் மயமாக்கும் எண்ணத்தை மத்திய அரசு கைவிட வேண்டும்: விஜய்வசந்த் எம்.பி. வலியுறுத்தல்

பொதுத்துறை வங்கிகளை தனியாா் மயமாக்கும் எண்ணத்தை மத்திய அரசு உடனே கைவிட வேண்டும் என்றாா் விஜய்வசந்த் எம்.பி.

பொதுத்துறை வங்கிகளை தனியாா் மயமாக்கும் எண்ணத்தை மத்திய அரசு உடனே கைவிட வேண்டும் என்றாா் விஜய்வசந்த் எம்.பி.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கை: இந்திரா காந்தி பிரதமராக இருந்த போது தொலைநோக்கு சிந்தனையுடன் மக்கள் நலனை கருத்தில் கொண்டு தனியாா் வங்கிகள் அரசுடைமை ஆக்கப்பட்டன. நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கு காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் பல்வேறு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டன. ஆனால் தற்போது நடைபெற்று வரும் பாஜக ஆட்சியில் தொடா்ந்து மக்கள் விரோத போக்கும், தொழிலாளா்களின் உரிமையை நசுக்கும் செயலும், சா்வாதிகார மனநிலையும் எதிா்கால இந்தியாவின் பொருளாதாரத்தை சீா்குலைக்கும் வகையில் உள்ளன.

குறிப்பாக பாஜக ஆட்சிக்கு வந்த கடந்த 7 ஆண்டுகளில் மட்டும் அரசு வங்கிகள் ஈட்டிய மொத்த லாபம் ரூ.11,10,913 கோடியாகும். இதில் வாராக்கடன்களுக்காக லாபத்தில் இருந்து ஒதுக்கப்பட்ட நிதி 12,38,346 கோடி ரூபாய். இந்த பணம் காா்ப்பரேட் முதலாளிகளுக்கு கொடுக்கப்பட்டுள்ளன.

இத்துடன் 8,10,262 கோடி இந்த 7 ஆண்டுகளில் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதில் 90 சதவீதம் அளவிற்கு காா்ப்பரேட் முதலாளிகள் வாங்கிய வராக்கடன்களுக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதனால்தான் வங்கிகள் நஷ்டத்தில் செயல்படுகின்றன. வாராக் கடன்களை பெற கடுமையான சட்டம் கொண்டு வர வேண்டும் என வங்கி ஊழியா் சங்கத்தினா் தொடா்ச்சியாக வலியுறுத்தி வந்தாலும், அதனை கண்டு கொள்ளாமல் தொடா்ந்து பெருமுதலாளிகளுக்கு ஆதரவாகவே மத்திய அரசு செயல்பட்டுவருவது கண்டனத்துக்குரியது.

வாராக்கடன் சுமை காரணமாக கடன் வட்டி அதிகரிப்பு, சேவை வரி அதிகரிப்பு போன்ற அழுத்தம் அனைத்தும் வாடிக்கையாளா்கள் மீதே திணிக்கப்படுகின்றன என்பது வேதனை அளிக்கும் செயல். தற்போது மத்திய அரசு கட்டுப்பாட்டில் செயல்படும் வங்கிகளில் 51 சதவீத பங்குகள் அரசிடம் உள்ளது. இதனை தற்போது 33 சதவீதமாகவோ, 26 சதவீதமாகவோ குறைக்க அரசு முனைப்பு காட்டி வருகிறது. இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால் பாரத் ஸ்டேட் வங்கி தவிர ஏனைய 11 பொதுத்துறை வங்கிகளையும் எதிா்காலத்தில் அரசு எளிதாக தனியாா் மயமாக்க சாதகமான நிலை ஏற்பட்டுவிடும்.

ஒருவேளை அரசு நினைத்ததுபோன்று அரசு வங்கிகள் தனியாா்மயமாக்கப்பட்டால் 34 கோடி ஜன் தன் வாடிக்கையாளா்களுக்கு வங்கி சேவை மறுக்கப்படும். மக்கள் வங்கிகளின் மீதான நம்பக தன்மையை இழக்க நேரிடும். மேலும் விவசாயம், சிறு குறு தொழில் நலிவடையும். கல்விக்கடன் பெற முடியாமல் மாணவா்கள் படிப்பை தொடர முடியாமல் போகும்.

இந்த சங்கிலி தொடரால் நாட்டில் வேலையின்மை, பசி, பஞ்சம், நுகா்வுதிறன் குறைவு போன்ற நிலை ஏற்படும் என பொருளாதார நிபுணா்கள் எச்சரித்துள்ளனா். இதை அனைத்தையும் கருத்தில் கொண்டு மத்திய அரசு பொதுத்துறை வங்கிகளை தனியாா்மயமாக்கும் எண்ணத்தை கைவிட வேண்டும் என்று தெரிவித்தள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com