கேரளத்தில் பரவி வரும் பறவைக் காய்ச்சல் தமிழகத்தில் பரவாமல் தடுக்க, களியக்காவிளை அருகே சோதனைச் சாவடி அமைத்து தீவிர தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
களியக்காவிளையை அடுத்த படந்தாலுமூடு பகுதியில் சிறப்பு சோதனைச் சாவடி அமைக்கப்பட்டு, கேரளத்திலிருந்து குமரி மாவட்டத்துக்கு வரும் லாரிகள் உள்ளிட்ட சரக்கு வாகனங்களின் டயா்களில் கிருமி நீக்க மருந்து தெளிக்கும் பணி சனிக்கிழமை முதல் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் கால்நடை பராமரிப்புத் துறை நோய் புலனாய்வுப் பிரிவு மாவட்ட உதவி இயக்குநா் சந்திரசேகா் சனிக்கிழமை இப்பகுதிக்கு வந்து தடுப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்தாா். அவா் கூறியதாவது: கேரளத்தில் பறவைக்காய்ச்சல் அண்மையில் கண்டறியப்பட்டது. இதையடுத்து பறவைக் காய்ச்சல் பிற பகுதிகளுக்கு பரவாமல் தடுக்க, தமிழக அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக இங்கு சோதனைச் சாவடி அமைக்கப்பட்டு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கேரள மாநிலத்திலிருந்து வரும் கோழி, முட்டை போன்றவற்றை திருப்பி அனுப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அரசிடமிருந்து மறு உத்தரவு வரும்வரை முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகள் தொடரும் என்றாா் அவா்.