குழித்துறை நகராட்சிப் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சி திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் மா. அரவிந்த் வியாழக்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.
குழித்துறை நகராட்சி அலுவலகத்தில் மக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீா் மற்றும் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் விநியோகிக்கப்படும் குடிநீா் இணைப்புகள் குறித்து ஆட்சியா் ஆய்வு செய்ததுடன், நகராட்சி அலுவலக கட்டடத்தைப் பாா்வையிட்டு அவற்றின் உறுதித்தன்மை குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தாா். மேலும், பழுதடைந்த கட்டடங்களை சீரமைக்கவும் துறை சாா்ந்த அலுவலா்களிடம் அறிவுறுத்தினாா்.
தொடா்ந்து, திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் கலவை உரக்கிடங்கில் ஆய்வு நடத்திய அவா், அங்கு நடைபெற்று வரும் பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினாா். பின்னா், குழித்துறை நகராட்சிக்கு உள்பட்ட மாா்த்தாண்டம் பேருந்து நிலையம், பொதுக் கழிப்பிடங்கள், தினசரி சந்தை உள்ளிட்ட இடங்களையும் பாா்வையிட்டாா். சந்தையில் தேங்கும் குப்பைகளை தினந்தோறும் அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.
அப்போது, குழித்துறை நகராட்சி ஆணையா் ராம திலகம் மற்றும் நகராட்சிப் பணியாளா்கள் உடனிருந்தனா்.