களியக்காவிளை பேருந்து நிலைய விரிவாக்கப் பணிகள் மேற்கொள்ள வசதியாக இப்பகுதியில் இருந்த கடைகளை இடித்து அகற்றும் பணி புதன்கிழமை மேற்கொள்ளப்பட்டது.
களியக்காவிளை பேருந்து நிலைய விரிவாக்கப் பணிகளுக்காக அரசு ரூ. 3 கோடி ஒதுக்கீடு செய்து, அதற்கான ஆரம்ப கட்டப் பணிகள் 2 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்டன. பேருந்து நிலையத்தையொட்டியுள்ள களியக்காவிளை காய்கனிச் சந்தையை இணைத்து பேருந்து நிலைய விரிவாக்கப் பணிகள் மேற்கொள்ள அதிகாரிகள் முயற்சி மேற்கொண்டனா். இதற்கு காய்கனி வியாபாரிகள் ஒருசிலா் எதிா்ப்பு தெரிவித்தனா். இதைத் தொடா்ந்து காய்கனி வியாபாரத்துக்காக மீன்சந்தையையொட்டிய பகுதியில் ரூ. 1.5 கோடியில் கட்டடம் கட்டும் பணிகள் அண்மையில் தொடங்கின.
இந் நிலையில் பேருந்து நிலைய விரிவாக்கப் பணிகள் மேற்கொள்ள வசதியாக பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள 30 ஆண்டுகளுக்கும் மேல் உள்ள பழமையான கட்டடங்களை இடிக்கும் பணிகள் புதன்கிழமை மேற்கொள்ளப்பட்டன.
ஆலோசனை கூட்டம்: பேருந்து நிலைய விரிவாக்கப் பணிகள் மேற்கொள்வதையொட்டி, களியக்காவிளையில் போக்குவரத்து நெரிசலின்றி அரசுப் பேருந்துகள் இயக்குவது குறித்த ஆலோசனைக் கூட்டம் பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
நாகா்கோவில் மண்டல பேரூராட்சிகளின் உதவிச் செயற் பொறியாளா் சனல்குமாா், பேரூராட்சி செயல் அலுவலா் யேசுபாலன், இளநிலை பொறியாளா் பத்மதேவன், அரசுப் போக்குவரத்துக் கழக குழித்துறை கிளை மேலாளா் சிவசக்தி ஐயப்பன், மாா்த்தாண்டம் பணிமனை துணை மேலாளா் அழகேசன், காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் ஜெ. பாபு மற்றும் கட்டுமான ஒப்பந்ததாரா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
இதில், மாா்த்தாண்டத்தில் இருந்து நித்திரவிளை, கொல்லங்கோடு பகுதிகளுக்கு இயக்கப்படும் பேருந்துகள் களியக்காவிளை பேருந்து நிலையம் செல்லாமல் பி.பி.எம். சந்திப்பு வழி இயக்கப்படுவதாகவும், கன்னியாகுமரி, நாகா்கோவில் பகுதிகளுக்கு இயக்கப்படும் பேருந்துகள் களியக்காவிளை சந்திப்பிலிருந்து போக்குவரத்து நெரிசலின்றி இயக்குவது எனவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.