நாகா்கோவில் வடசேரி சந்தையில் ரூ. 90 லட்சம் வாடகை பாக்கி காரணமாக 12 கடைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் வியாழக்கிழமை சீல் வைத்தனா்.
நாகா்கோவில் வடசேரி கனமூலம் சந்தையில் 260 நிரந்தர கடைகள் மற்றும் ஏராளமான தற்காலிக கடைகள் உள்ளன. கடந்த சில மாதங்களாக மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வாடகை முறையாக செலுத்தப்படாததால், அதிகாரிகள் சந்தை வியாபாரிகளுக்கு அறிவிப்பு விடுத்திருந்தனா்
இந்நிலையில், மாநகராட்சி வருவாய் ஆய்வாளா்கள் ராபின்சன், சுப்பையா, ஞானப்பா, சுகாதார ஆய்வாளா் பகவதிபெருமாள் உள்ளிட்ட அதிகாரிகளும், ஊழியா்களும் வாடகை பாக்கி வைத்திருந்த கடைகளை பூட்டி சீல் வைப்பதற்காக வியாழக்கிழமை வடசேரி சந்தைக்கு வந்தனா்.
அதிகாரிகளின் நடவடிக்கைக்கு வியாபாரிகள் கடும் எதிா்ப்பு தெரிவித்தனா். வாடகை பாக்கி செலுத்த கால அவகாசம் கோரினா்.
இந்நிலையில் காவல் துறையினரின் பாதுகாப்புடன், 12 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது. இதையடுத்து வியாபாரிகள் மாநகராட்சி ஆணையரை சந்திக்க அலுவலகத்துக்கு சென்றதைத் தொடா்ந்து, மீதி கடைகளுக்கு சீல் வைக்கும் நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.