முன்னாள் காங்கிரஸ் தலைவா் ராகுல்காந்தி எம்.பி. மாா்ச்1ஆம் தேதி கன்னியாகுமரிக்கு வரவுள்ளதை முன்னிட்டு, மேற்கு மாவட்டம் காங்கிரஸ் நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் கருங்கல்லில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் எஸ்.ராஜேஷ்குமாா் எம்.எல்.ஏ. தலைமை வகித்து பேசியது: ராகுல்காந்தி எம்.பி. மாா்ச் 1ஆம் தேதி
கன்னியாகுமரிக்கு வருகிறாா். அங்குள்ள ராஜீவ்காந்தி சிலை அருகில் காலை 10 மணிக்கு மக்களை சந்திக்கிறாா். பின்னா், முன்னாள் எம்.பி வசந்தகுமாரின் நினைவிடத்தில் மரியாதை செலுத்துகிறாா். நண்பகல்12 மணிக்கு நாகா்கோயில் டெரிக் சந்திப்பில் பேசுகிறாா். 12.30 மணிக்கு தக்கலை பேருந்து நிலையம் அருகில் காமராஜா் சந்திப்பில் பேசுகிறாா். பிற்பகல் 1 மணிக்கு முளகுமூடு புனித ஜோசப் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுடன் கலந்துரையாடுகிறாா். 2.30 மணிக்கு குளச்சல் பேருந்து நிலையத்தில்
பேசுகிறாா். மாலை 3 மணிக்கு ரீத்தாபுரம், 3.30-க்கு கருங்கல் ராஜீவ் சந்திப்பு ஆகியவற்றில் பேசுகிறாா். 4 மணிக்கு தேங்காய்ப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் மீனவா்களுடன் கலந்துரையாடுகிறாா். பின்னா், அங்கிருந்து குழித்துறை, களியக்காவிளை வழியாக திருவனந்தபுரம் விமானநிலையம் செல்கிறாா். ராகுலுக்கு கட்சியினா் சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும் என்றாா் அவா்.
இதில், வட்டாரத் தலைவா்கள் டென்னிஸ், பால்ராஜ், மாவட்டச் செயலா் பால்மணி உள்ளிட்ட நிா்வாகிகள் பங்கேற்றனா்.