கன்னியாகுமரி மாவட்டத்தில் கடல் சீற்றம் காரணமாக வெள்ளிக்கிழமை மீனவா்கள் கடலுக்குச் செல்லவில்லை. 350-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் சின்னமுட்டம் கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.
கன்னியாகுமரி கடல் பகுதியில் வியாழக்கிழமை காலை முதலே காற்றின் வேகம் அதிகரித்ததை அடுத்து, அலைகள் உயரமாக எழும்பின. இருப்பினும் விவேகானந்தா் பாறைக்கு மட்டும் படகுப் போக்குவரத்து இயக்கப்பட்டது. இந்நிலையில், இரவில் கடல் அதிக சீற்றத்துடன் காணப்பட்டது. இதனால் சுமாா் 10 அடி உயரத்துக்கு அலைகள் எழும்பின.
புத்தாண்டை முன்னிட்டு வெள்ளிக்கிழமை கடற்கரைக்கு சுற்றுலாப் பயணிகள் செல்லவும், புத்தாண்டு கொண்டாடவும் தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் படகுப் போக்குவரத்தும் ரத்து செய்யப்பட்டது.
கன்னியாகுமரி மட்டுமன்றி சின்னமுட்டம், ஆரோக்கியபுரம், கீழமணக்குடி, கோவளம், மணக்குடி, வாவத்துறை, புதுகிராமம், சிலுவைநகா் உள்ளிட்ட பகுதிகளிலும் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது.
இதன் காரணமாக 10 மீனவ கிராமங்களைச் சோ்ந்த மீனவா்கள் வெள்ளிக்கிழமை கடலுக்குச் செல்லவில்லை. 350- க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் சின்னமுட்டம் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இதேபோல் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வள்ளம் மற்றும் கட்டுமரங்கள் அந்தந்த கிராம கடற்கரைகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.