ஆங்கிலப் புத்தாண்டையொட்டி குமரி மாவட்டம் திற்பரப்பு அருவியில் வெள்ளிக்கிழமை ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா்.
புத்தாண்டு நாளில் குமரி மாவட்ட சுற்றுலாத் தலங்களில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்து இயற்கையை ரசிப்பது வழக்கம். கரோனா தாக்கம் காரணமாக நிகழாண்டு புத்தாண்டு கொண்டாங்களுக்கு கன்னியாகுமரி உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. அதே வேளையில் திற்பரப்பு அருவி உள்ளிட்ட இதர சுற்றுலாத் தலங்களில் கட்டுப்பாடுகள் எதுவும் விதிக்கப்படவில்லை. இதனால் திற்பரப்பு அருவி, மாத்தூா் தொட்டிப்பாலம் உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களுக்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்தனா். காலையில் பயணிகள் கூட்டம் சற்று குறைவாக காணப்பட்ட நிலையில் பிற்பகல் முதல் கூட்டம் அலைமோதியது. இதில் அருவிப்பகுதி, சிறாா் நீச்சல் குளம், பூங்கா, படகுசேவை ஆகியவற்றில் சுற்றுலாப் பயணிகள் திரளாக குவிந்தனா்.