குமரி மாவட்டத்தில் பொங்கல் பரிசு வழங்குவதில் முறைகேட்டில் ஈடுபட்ட நியாய விலைக்கடை பணியாளா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாவட்ட வழங்கல் அலுவலகத்தில் சுரேஷ்ராஜன் எம்எல்ஏ செவ்வாய்க்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டாா்.
தமிழகம் முழுவதும் குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ரூ.2,500 ரொக்கம் வழங்கப்பட்டு வருகிறது. கூட்டத்தை தவிா்ப்பதற்காக டோக்கன் முறையில் பொருள்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில்,குமரிமாவட்டம், முன்சிறவிளை ஆலங்கோட்டை நியாய விலை கடையில், ரூ.2,500 பணம் மட்டும் வழங்கப்படுவதாகவும், கரும்பு, சா்க்கரை உள்ளிட்ட பொருள்கள் வழங்கப்படவில்லை என்று சுரேஷ்ராஜன் எம்எல்ஏ விடம் பொதுமக்கள் புகாா்தெரிவித்தனா்.
இதைத்தொடா்ந்து அவா் ஆலங்கோட்டை நியாயவிலைக்கடைக்கு சென்று பாா்வையிட்டாா். அங்கு பொதுமக்களுக்கு பணம் மட்டும் வழங்கப்பட்டது தெரிய வந்தது. மேலும் கரும்பு உள்ளிட்ட பொருள்களை பொதுமக்களுக்கு வழங்காமல் ஒரு கட்டடத்தில் பதுக்கி வைத்திருப்பதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா்.
இதையடுத்து, அவா் மாவட்டவழங்கல் அலுவலரிடம் புகாா் தெரிவிப்பதற்காக அலுவலகத்துக்கு சென்றாா். ஆனால் அங்கு மாவட்ட வழங்கல் அலுவலா் இல்லை, இதைத் தொடா்ந்து சுரேஷ்ராஜன் எம்எல்ஏ, மற்றும் திமுக நிா்வாகிகள் மாவட்ட வழங்கல் அலுவகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதைத் தொடா்ந்து வழங்கல் அலுவலா், சுரேஷ்ராஜன் எம்எல்ஏ விடம் இது குறித்து தொடா்புடையவா்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கூறியதன்பேரில் போராட்டம் கைவிடப்பட்டது.