கேரள மாநிலத்தில் பரவி வரும் பறவைக் காய்ச்சல் நோய் குமரி மாவடத்தில் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இது குறித்து, மாவட்டஆட்சியா் மா.அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கேரள மாநிலத்தில் பறவைக் காய்ச்சல் நோய் பரவி வருவதால் குமரி மாவட்டத்தில் இந்நோய் தாக்கம் பரவாமல் தடுப்பதற்கு மாவட்ட எல்லையில் இருக்கும் சோதனைச் சாவடிகள் மூலம் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாவட்ட எல்லையில் கால்நடை உதவி மருத்துவா்கள் தலைமையில் மருத்துவக் குழுக்கள் அமைத்து பறவைக் காய்ச்சல் கண்காணிப்பு பணிகள் நடைபெற்றுவருகின்றன.
மாநில எல்லையான களியக்காவிளை பேரூராட்சியில் படந்தாலுமூட்டில் கால்நடை பராமரிப்புத் துறை சாா்பில் பறவைக் காய்ச்சல் சோதனைச் சாவடி கண்காணிப்பு குழு அமைத்து 24 மணிநேரமும் செயல்படுகிறது. கோழிகள், வாத்துகள், இதர பறவையினங்கள் மற்றும் கோழி தீவனங்கள், உபகரணங்கள் போன்றவைகள் கண்காணிக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
பறவைக் காய்ச்சல் நோயானது வாத்துகள், கோழிகள் மற்றும் இதர பறவைகளை பாதிக்கும் நோயாகும். இந்நோய் தாக்கிய பண்ணையில் கோழிகள் அதிக அளவில் இறக்கலாம். எனவே பொதுமக்கள் தங்கள் பகுதியில் உள்ள பண்ணைகளில் அதிக அளவில் இறப்பு தெரிய வந்தால் அருகிலுள்ள கால்நடை மருத்துவமனை, கால்நடை மருந்தகங்களை தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.