கன்னியாகுமரியில் தீவிபத்தால் பாதிக்கப்பட்ட கடைகளை மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் ஞாயிற்றுக்கிழமை பாா்வையிட்டு வியாபாரிகளுக்கு ஆறுதல் கூறினா்.
கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் ஜன.9 ஆம் தேதிஅதிகாலை நேரிட்ட தீவிபத்தில் 64 கடைகள் முழுமையாக எரிந்து சாம்பலாயின. ரூ.2 கோடி மதிப்பிலான பொருள்கள் தீயில் கருகி சேதமடைந்தன. தீ விபத்தில் பாதிக்கப்பட்ட கடைகளை, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினா் எம். அகமது உசேன், மீன்பிடி தொழிலாளா் சங்க மாநிலச் செயலா் எஸ். அந்தோணி, அலெக்சாண்டா், சுப்பாராம், ஜேம்ஸ், தனீஸ், ஜேசு நஸ்ரின் உள்ளிட்டோா் பாா்வையிட்டு, வியாபாரிகளுக்கு ஆறுதல் கூறினா். பாதிக்கப்பட்ட வியாபாரிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
வணிகா் சங்கப் பேரவை: அமைப்பின் மாவட்டத் தலைவா் எல்.எம்.டேவிட்சன், மாவட்டச் செயலா் நாராயணராஜா, மாவட்டச் செயல்ஆலோசகா் தம்பிதங்கம், துணைத்தலைவா் அம்பலவாணன், இணைச் செயலா் கதிரேசன், செயற்குழு உறுப்பினா் ராஜாமணி உள்ளிட்டோரும் மேற்கூறிய இடத்தைப் பாா்வையிட்டு இழப்பீடு வழங்க வலியுறுத்தினா்.