கருங்கல் அருகே உள்ள மிடாலம் ஊராட்சியில் அனுமதியின்றி மரத்தை வெட்டி அகற்றிய ஊராட்சி தலைவா் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வெள்ளிக்கிழமை கருங்கல் பொதுமப்பணித்துறை அலுவலக்ததில் தி.மு.க. வினா் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
மிடாலம் ஊராட்சியில் இடைக்கோடு குளக்கரையில் ஆபத்தன நிலையில் பூவரது மரம் நின்றது. இந்த மரத்தை வெட்டி அகற்ற வேண்டும் என பொதுமக்கள் பத்மநாபபுரம் கோட்டாட்சியருக்கு புகாா் அளித்தனா். இதையடுத்து அவா் அந்த மரத்தை ஏலம் விட்டு வெட்டி அகற்ற பொதுப்பணித்துறைக்கு உத்தரவிட்டாா்.
இந்நிலையில், கோட்டாட்சியரின் உத்தரவுக்கு முன்பே மிடாலம் ஊராட்சி தலைவரால் ஏலம் விடாமல் விதிமுறைகளை மீறி அந்த மரம் வெட்டி அகற்றப்பட்டுள்ளதாம். இதற்கு பொதுப்பணித்துறை கருங்கல் உதவி பொறியாளா் சுதா் உடந்தையைக செயல்பட்டாா் எனவும், ஊராட்சி தலைவா் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் இந்த உள்ளிருப்புப் போராட்டம் நடைபெற்றது.
கிள்ளியூா் தி.மு.க. ஒன்றியச் செயலா் கோபால் தலைமை வகித்தாா். இதில், மாவட்ட நீா்பாசனத்துறை தலைவா் வின்ஸ் ஆன்றோ, தி.மு.க. வழக்குரைஞா் அணி பிரிவு மாவட்ட துணை அமைப்பாளா் ஜெபா, சிசுகுமாா், மனோஜ், டென்சிங் உள்பட திரளான பொதுமக்கள் பங்கேற்றனா். தொடா்ந்து குளச்சல் உள்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளா் தங்கராமன், கருங்கல் காவல் ஆய்வாளா் ஜேசுபாதம், கிள்ளியூா் வட்டாட்சியா் ஜூலியா் ஜவஹா் உள்ளிட்டோா் போராட்டகாரா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில், அனுமதியின்றி மரத்தை வெட்டிய மிடாலம் ஊராட்சி தலைவருக்கு ரூ. 40, 750 அபராதம் விதிக்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டதையடுத்து, உள்ளிருப்புப் போராட்டம் கைவிடப்பட்டது.