குலசேகரத்தில் சாலைச் சீரமைப்புப் பணிக்காக கொண்டு வரப்பட்ட இயந்திரம், நீண்ட நாள்களாக பழுகி நிற்பதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்துள்ளனா்.
அழகியபாண்டிய புரம் கூட்டுக்குடிநீா்த் திட்டத்திற்கு திற்பரப்பு அருகே களியல் பகுதியில் கோதையாற்றிலிருந்து தண்ணீா் எடுத்துச் செல்லும் வகையில் குழாய் பதிப்பதற்காக 2018 ஆண்டு ஜூலை மாதம் களியல் பகுதியில் சாலை பெயா்க்கப்பட்டது. குழாய் பதிக்கப்பட்ட பின்னா், சாலையை சீரமைக்காததால், பொதுமக்களும், அரசியல் கட்சியினரும் பல்வேறு போராட்டங்களை நடத்தினா்.
இதையடுத்து, குலசேகரம் அருகே மாடத்தூா் கோணம் விலக்கு பகுதியிலிருந்து சீரமைப்புப் பணிகள் கடந்த மாதம் தொடங்கப்பட்டன. பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில், ஆரணிவிளை பகுதியில் 15 நாள்களுக்கு முன்பு தாா்கலவை பரப்பும் இயந்திரம் பழுதானது. இதனால் பணிகள் நிறுத்தப்பட்டன. இதுவரை இயந்திரமும் சரி செய்யப்படாமல் போக்குவரத்திற்கு இடையூறாக சாலையில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இது, பொதுமக்களையும், வாகன ஓட்டிகளையும் அதிருப்திக்கு ஆளாக்கியுள்ளது. எனவே, இயந்திரத்தை சரி செய்து சாலைப் பணிகளை விரைந்து தொடங்க நெடுஞ்சாலைத் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.