கேரள மாநிலத்தில் கரோனா தொற்று பரவல் குறைந்து வருவதையடுத்து, அம் மாநில போக்குவரத்துக் கழகம் சாா்பில் தொலைதூர பகுதிகளுக்கு குறைந்த அளவிலான பேருந்துகள் புதன்கிழமை முதல் இயக்கப்பட்டன.
கரோனா பரவல் காரணமாக கடந்த மே மாதம் முதல் கேரளத்தில் அரசுப் பேருந்து சேவை நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில் அம் மாநிலத்தில் கரோனா தொற்று பரவல் குறைந்து வருவதையடுத்து புதன்கிழமை முதல் பேருந்துகளை இயக்க முடிவு செய்துள்ளதாக அம் மாநில போக்குவரத்துத் துறை அமைச்சா் ஆன்டணி ராஜூ செவ்வாய்க்கிழமை தெரிவித்திருந்தாா். அதன்படி, முதல்கட்டமாக தொலைதூர பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகள் குறைந்த அளவில் இயக்கப்பட்டன. நகரப் பேருந்துகள் இயக்கப்படவில்லை.
திருவனந்தபுரத்திலிருந்து ஆலப்புழா, கோட்டயம், காசா்கோடு, திருச்சூா் உள்ளிட்ட தொலைதூர பகுதிகளுக்கு 7 பேருந்துகள் இயக்கப்பட்டன. பாறசாலை பணிமனையில் இருந்து எா்ணாகுளம் பகுதிக்கு காலை 5.30 மணிக்கும், காட்டாக்கடை பகுதியிலிருந்து திருச்சூருக்கு காலை 7.30 மணிக்கும், விழிஞ்ஞம் பகுதியிலிருந்து திருச்சூருக்கு காலை 8 மணிக்கும் பேருந்துகள் கிளம்பிச் சென்ாகவும், திருவனந்தபுரம், கொல்லம், கொட்டாரக்கரை, பத்தனம்திட்டை உள்ளிட்ட தென் கேரள பகுதியிலிருந்து மொத்தம் 17 பேருந்துகள் மட்டுமே முதல்கட்டமாக புதன்கிழமை இயக்கப்பட்டதாக போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
கரோனா விதிமுறைகள் படி இணைய வழியில் பதிவு செய்த பயணிகள் மட்டுமே பேருந்தில் பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டதாகவும் அதிகாரிகள் மேலும் தெரிவித்தனா்.