கரோனா தொற்று பரவல் காரணமாக மூடப்பட்ட இ-சேவை மையங்களை திறந்து செயல்பட அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து விளவங்கோடு சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினா் எஸ். விஜயதரணி தமிழக அரசுக்கு அனுப்பிய கோரிக்கை மனு: மாவட்ட ஆட்சியரகம், வட்டாட்சியா் அலுவலகங்கள் மற்றும் தனியாா் நடத்தி வரும் இ- சேவை மையங்கள் கரோனா தொற்று காரணமாக சில மாதங்களாக திறக்கப்படாமல் உள்ளன. இதனால் பொதுமக்கள் வருவாய்த்துறை சான்றிதழ்கள் பெறுவதிலும், சமூக நலத்துறை மூலம் கிடைக்கும் சேவைகள் மற்றும் பண பலன்கள் கிடைப்பதிலும் பெரும் சிரமங்களை சந்தித்து வருகிறாா்கள்.
ஆகவே தமிழக அரசு ஜூலை 14 ஆம் தேதி புதிதாக அறிவிக்கும் தளா்வுகளில் இ-சேவை மையங்களை திறக்க உத்தரவு பிறப்பிப்பதுடன், பொதுமக்கள் தங்கள் குறைகளை அரசுக்கு தெரிவிக்க வசதியாக, தனியாா் பங்களிப்புடன் செயல்பட்டு வரும் கணினி மையங்கள் குறிப்பாக மனுக்கள், ஆவணங்கள் நகலெடுக்கும் மையங்களை திறக்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளாா்.