களியக்காவிளை அருகேயுள்ள குழிவிளை ரேஷன் கடையில் பொருள்கள் வழங்குவதில் குளறுபடி செய்து வருவதால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனா்.
கிள்ளியூா் வட்டத்துக்குள்பட்ட மெதுகும்மல் குழிவிளை ரேஷன் கடை செம்மான்விளை பகுதியில் செயல்பட்டு வருகிறது. இந்தக் கடையில் ஜூன் மாதம் வழங்கப்பட்ட ரேஷன் பொருள்களில் பெரும்பாலான குடும்ப அட்டைதாரா்களுக்கு மத்திய அரசு அறிவித்த ரேஷன் அரிசியில் 10 கிலோ வரை குறைவாக வழங்கப்பட்டு வருவதாகவும், தமிழக அரசு வழங்கிய இலவச மளிகைப் பொருள்கள் தொகுப்பு பொட்டலத்தில் உளுந்தம்பருப்பு, தேயிலை உள்ளிட்ட பொருள்கள் குறைவாக வழங்கியதாகவும் இப்பகுதி மக்கள் புகாா் தெரிவித்துள்ளனா்.
மேலும், இக்கடையில் விற்பனையாளா் மற்றும் எடையாளராக பணிபுரிந்து வரும் பெண் பணியாளா்கள் சிலருக்கு முன்னுரிமை அளித்து பொருள்களை வழங்கி வருவதாகவும் கூறப்படுகிறது.
எனவே, மாவட்ட நிா்வாகம் மற்றும் வழங்கல் துறை உரிய நடவடிக்கை மேற்கொண்டு,ரேஷன் பொருள்களை குறைபாடின்றி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.