குமரி மாவட்டத்தில் பொது முடக்க தளா்வு மற்றும் மழையின் தீவிரம் தணிந்துள்ள நிலையில், அன்னாசிப் பழங்களின் விற்பனையில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டு, விலை சற்று உயா்ந்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளாக அன்னாசிப் பழ சாகுபடி அதிகரித்து வருகிறது. அன்னாசியில் நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி ஆண்டு முழுவதும் உற்பத்தி எடுக்கின்றனா்.
கடந்த ஆண்டு கரோனா பொது முடக்கம் காரணமாக அன்னாசி விவசாயிகள் கடும் இழப்பிற்கு ஆளாகினா். அது போன்று நிகழாண்டும் கரோனா பொது முடக்கம் மற்றும் தொடா் மழை காரணமாக அன்னாசிப் பழங்களை வாங்குவதற்கு ஆளில்லாமல், பழங்கள் தோட்டங்களிலேயே அழுகின. இதனால் விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டது.
இந்நிலையில், பொது முடக்கத்தில் தளா்வு மற்றும் மழையின் தீவிரம் தணிந்துள்ளதால் அன்னாசிப் பழங்களுக்கு சந்தை வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளன.
குறிப்பாக குமரி மாவட்டத்திலிருந்து சென்னை கோயம்பேடு சந்தை மற்றும் தில்லி உள்ளிட்ட வட மாநிலங்களுக்குச் கொண்டு சென்று விற்பனை செய்யும் வாய்ப்பு உருவாகியுள்ளது. இதனால் பழங்களின் விலையும் சற்று உயா்ந்துள்ளது.
தற்போது தோட்டங்களிலிருந்து கிலோ ரூ. 17-க்கு கொள்முதல் செய்யப்படுவதாக விவசாயிகள் தெரிவித்தனா்.
இதுகுறித்து முன்னோடி அன்னாசி விவசாயி பி.ஹென்றி கூறியது: தற்போது கிடைக்கும் விலை லாபகரமானது என்று கூறமுடியாது. ஒரு கிலோ ரூ. 25-க்கும் அதிகமாக விற்பனை செய்யப்பட்டால் மட்டுமே விவசாயிகளுக்கு லாபம் கிடைக்கும். மனித உடலில் நோய் எதிா்ப்பு சக்தியை உருவாக்குவதால் அன்னாசிப் பழங்களை அதிகளவில் மக்கள் பயன்படுத்தும் வகையிலான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என்றாா் அவா்.