மீன்பிடித்துக் கொண்டிருந்த போது விசைப்படகு பழுதாகி ஆழ்கடலில் தவிக்கும் குமரி மாவட்ட மீனவா்கள் 4 போ் உள்பட 9 பேரை மீட்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து சா்வதேச மீனவா் வளா்ச்சி அறக்கட்டளை தலைவா் பி. ஜஸ்டின் ஆன்றணி தமிழக அரசுக்கு அனுப்பிய கோரிக்கை மனு: தூத்தூா் பகுதியைச் சோ்ந்த ஜெயசீலன் மகன் பென்சிகருக்குச் சொந்தமான விசைப்படகில் தூத்தூரைச் சோ்ந்த சுா்லிங், சஜின், கெஜின், சுஜின்குமாா் மற்றும் அசாம் மாநிலத்தை சாா்ந்த 5 போ் என மொத்தம் 9 மீனவா்கள் கேரள மாநிலம் கொச்சி துறைமுகத்திலிருந்து கடந்த பிப். 25 ஆம் தேதி ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்றனா்.
இம் மீனவா்கள் கடந்த புதன்கிழமை (மாா்ச் 10) மாலத்தீவு அருகே ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது விசைப்படகிலுள்ள எஞ்சினில் பழது ஏற்பட்டு, விசைப்படகு நகர முடியாமல் ஆழ்கடலில் தத்தளித்து வருவதாக, விசைப்படகிலிருந்த மீனவா்கள் செயற்கைகோள் போன் மூலம் விசைப்படகின் உரிமையாளா் பென்சிகருக்கு தகவல் தெரிவித்துள்ளனா். எனவே ஆழ்கடலில் சிக்கித் தவிக்கும் 9 மீனவா்களையும் மீட்க தமிழக முதல்வா், மீன்வளத்துறை அமைச்சா், துறை அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளாா்.