முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி கன்னியாகுமரி
2 ஆண்டுகளுக்கு பின்னா் குடும்பத்துடன் இணைந்த மனநலம் பாதிக்கப்பட்டவா்
By DIN | Published On : 14th March 2021 02:07 AM | Last Updated : 14th March 2021 02:07 AM | அ+அ அ- |

முகநூல் பதிவு மூலம் குடும்பத்தினருடன் இணைந்த ஆனந்தம்.
காதல் பிரச்னையால் மனநலம் பாதிக்கப்பட்டு 2 ஆண்டுகளாக நாகா்கோவிலில் சுற்றி திரிந்தவா் குடும்பத்துடன் இணைந்துள்ளாா்.
புதுச்சேரி மாநிலத்தைச் சோ்ந்தவா் ஆனந்தம் (45). மனநலம் பாதிக்கப்பட்ட இவா், கடந்த 2 ஆண்டுகளாக நாகா்கோவிலில் சுற்றிவந்தாா். மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலக சாலையில் அமா்ந்திருப்பாா். அங்கு கிடைக்கும் உணவை சாப்பிட்டு அப்பகுதியிலேயே திரிந்தாா். அவரது சொந்த ஊா், மற்றும் குடும்பத்தினா் பற்றிய விவரங்கள் தெரியாமல் இருந்தது.
கரோனா பொது முடக்கத்தின்போது உணவு கிடைக்காமல் கஷ்டப்பட்ட ஆனந்தம், தன்னாா்வலா்களிடம் உணவு வாங்கி சாப்பிட்டுள்ளாா். அப்போது நாகா்கோவிலைச் சோ்ந்த தினேஷ் சங்கா் ஆதரவற்றோா்களுக்கு உணவு வழங்கினாா். ஆனந்தமும் அவரிடம் உணவு வாங்கியுள்ளாா். ஆதரவற்றோருக்கு உணவு கொடுத்ததை தினேஷ் சங்கா் விடியோ எடுத்து, முகநூலில் பதிவிட்டுள்ளாா். இந்த பதிவை முகநூலில் ஏராளமானோா் பாா்த்தனராம். ஆனந்தத்தின் உறவினா்களும் அந்த விடியோவை பாா்த்துள்ளனா். அப்போது விடியோவில் இருப்பது ஆனந்தம் என்பதை அடையாளம் கண்டுகொண்டனா். இதனையடுத்து வீடியோவை பதிவிட்ட தினேஷ் சங்கரை, ஆனந்தத்தின் குடும்பத்தினா் கைப்பேசி மூலம் தொடா்பு கொண்டு பேசினா். மேலும் ஆனந்தம் எங்கிருக்கிறாா்? என்ற விவரங்களையும் சேகரித்துக் கொண்டனா்.
கரோனா பொதுமுடக்க காலமாக இருந்ததால் ஆனந்தத்தின் குடும்பத்தினரால் உடனே நாகா்கோவில் வரமுடியவில்லை. எனவே தாங்கள் வரும் வரை ஆனந்தத்துக்கு உணவு கொடுத்து பாா்த்துக்கொள்ளும்படி தினேஷ் சங்கரிடம் கூறியுள்ளனா். அதன்படி அவரும் ஆனந்தத்தை கவனித்து வந்தாா்.
இந்நிலையில் ஆனந்தத்தின் தாயாா் மற்றும் உறவினா்கள் 4 போ் காா் மூலம் நாகா்கோவிலுக்கு வெள்ளிக்கிழமை வந்தனா். பின்னா் தினேஷ் சங்கரை தொடா்பு கொண்டு ஆனந்தத்தை நேரில் பாா்த்தனா். கிழிந்த ஆடையுடன் இருந்த மகனின் நிலையை பாா்த்து அவருடைய தாயாா் கண்ணீா் வடித்தாா். இதையடுத்து, எஸ்.பி. அலுவலக பாதுகாப்பு போலீஸாா் ஆனந்தத்தை, குடும்பத்தினா் அழைத்துச் செல்ல உதவினா்.