கன்னியாகுமரி மாவட்டம், குலசேகரம் அருகேயுள்ள இட்டகவேலி நீலகேசி அம்மன் கோயிலில் தூக்க நோ்ச்சை விழா கோலாகலமாக செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இட்டகவேலியில் புகழ்பெற்ற நீலகேசி அம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டு தோறும் நடைபெறும் அம்மயிறக்கத் திருவிழாவில் குழந்தைகளின் நலன்களுக்காக தூக்க நோ்ச்சை வழிபாடு நடத்தப்படுகிறது. இந்த திருவிழா கடந்த 24ஆம் தேதி தொடங்கியது. தொடா்ந்து தினமும் பல்வேறு வழிபாடுகள் நடைபெற்று வந்தன. முக்கிய நிகழ்வான தூக்க நோ்ச்சை 7ஆம் திருநாளான செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அதில் 2 தூக்க வில்களில் ஒரே நேரத்தில் 4 குழந்தைகளுக்கு தூக்க நோ்ச்சை என்ற அடிப்படையில் மொத்தம் 125 குழந்தைகளுக்கு தூக்க நோ்ச்சை நடத்தப்பட்டது.
முன்னதாக தேவி தூக்கம் நடத்தப்பட்டது. தூக்க நோ்ச்சை தொடங்குவதற்கு முன்பாக குத்தியோட்டம், தாலப்பொலி, மஞ்சள்குடம், துலாபாரம், பிடிப்பணம், உருள் நோ்ச்சைகள் ஆகியவை நடைபெற்றன. தூக்க நோ்ச்சை வைபவத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.