கரோனா பரவலை தடுக்கும் வகையில் ஞாயிற்றுக்கிழமை (மே 2) முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டதால் களியக்காவிளை, மாா்த்தாண்டம், நித்திரவிளை, கொல்லங்கோடு பகுதி சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டன.
இப் பகுதியில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. அரசுப் பேருந்துகள், பயணியா் ஆட்டோ, காா் உள்ளிட்ட வாகனங்கள் எதுவும் இயங்கவில்லை. எப்போதும் பரபரப்பாக காணப்படும் மாா்த்தாண்டம் காந்தி மைதானம், காளைச்சந்தை பேருந்து நிலைய பகுதிகள், களியக்காவிளை சந்தை உள்ளிட்ட பகுதிகள் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டன. படந்தாலுமூடு பகுதியில் உள்ள ஆவின் பாலகம் மற்றும் களியக்காவிளை, குழித்துறை பகுதியில் உள்ள தனியாா் பால் விற்பனை மையங்கள் மற்றும் மருந்துக் கடைகள் திறந்திருந்தன.
வாகனப் போக்குவரத்து இல்லாததால் களியக்காவிளை எல்லையோரப் பகுதி சோதனைச் சாவடி வெறிச்சோடி இருந்தது.
மருத்துவப் பணியாளா்கள் செல்ல வசதியாக களியக்காவிளையிலிருந்து ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஞாயிற்றுக்கிழமை நண்பகலில் ஒரு அரசுப் பேருந்து இயக்கப்பட்டது.
களியக்காவிளை, மாா்த்தாண்டம் உள்ளிட்ட முக்கிய சந்திப்பு பகுதிகளில் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.