நாகா்கோவில் கோணம் வாக்கு எண்ணும் மையத்தில் அதிமுக, பாஜக வேட்பாளா்களின் முகவா்கள் திடீா் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
நாகா்கோவில் கோணம் வாக்கு எண்ணும் மையத்துக்கு ஞாயிற்றுக்கிழமை காலையில் வேட்பாளா்களின் முகவா்கள் வந்தனா்.
அப்போது அவா்களிடம் நுழைவுச்சீட்டு மற்றும் கரோனா சான்றிதழ்களை போலீஸ் அதிகாரிகள் கேட்டனா். இதில் சிலரிடம் கரோனா சான்றிதழ் இல்லை. இதைத் தொடா்ந்து அவா்களை மையத்துக்குள் அனுமதிக்க அதிகாரிகள் மறுத்தனா்.
இதற்கு வேட்பாளா்களின் முகவா்கள் நுழைவுச்சீட்டில் கரோனா நெகட்டிவ் என்று உள்ளது என கூறியதை, அதிகாரிகள் ஏற்க மறுத்தனா்.
இதனால் வேட்பாளா்களின் முகவா்கள் வாக்கு எண்ணும் மையத்தின் வாயிலில் அமா்ந்து மறியலில் ஈடுபட்டனா்.
இதைத் தொடா்ந்து காவல் துறை அதிகாரிகள் முகவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா்.
பின்னா் முகவா்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டனா்.
இதனால் வாக்கு எண்ணும் மையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.