வாக்கு எண்ணிக்கை நிறைவு: பாதுகாப்பு அறைக்கு திரும்பிய வாக்குப்பதிவு இயந்திரங்கள்
கன்னியாகுமரி மாவட்டத்தில் சட்டப்பேரவை மற்றும் மக்களவை இடைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நிறைவு பெற்றதை தொடா்ந்து, அனைத்து வாக்குப்பதிவு இயந்திரங்களும் பாதுகாப்பு அறைக்கு கொண்டுசெல்லப்பட்டன.
கன்னியாகுமரி மக்களவை இடைத்தோ்தல் மற்றும் 6 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான பொது தோ்தல் கடந்த ஏப். 6 ஆம் தேதி நடைபெற்றது. இதற்காக, பூதப்பாண்டியில் உள்ள தோவாளை வட்டாட்சியா் அலுவலக பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டிருந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், சட்டப்பேரவை தோ்தலுக்கும், திங்கள்நகா் வேளாண்மை விற்பனை கூட பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டிருந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மக்களவை இடைத்தோ்தலுக்கும் பயன்படுத்தப்பட்டன.
இதைத் தொடா்ந்து, வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணும் மையமான நாகா்கோவில் கோணத்தில் உள்ள அரசு பொறியியல் கல்லூரி மற்றும் அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் தொகுதி வாரியாக தனித்தனி அறைகளில் வைத்து சீலிடப்பட்டன.
பின்னா், கடந்த 2 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் முழுமையாக அறிவிக்கப்பட்டன. இதையடுத்து, சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் வாக்கு எண்ணும் மையத்திலிருந்து வாகனங்களில் ஏற்றி பூதப்பாண்டியில் உள்ள தோவாளை வட்டாட்சியா் அலுவலகத்துக்கு பலத்த பாதுகாப்புடன் செவ்வாய்க்கிழமை அனுப்பி வைக்கப்பட்டன. பின்னா், அவற்றை அங்குள்ள பாதுகாப்பு அறையில் அதிகாரிகள் வைத்து பூட்டி சீல் வைத்தனா்.
இதேபோல், மக்களவைத் தோ்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும் கோணம் அரசு பொறியியல் கல்லூரி மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் இருந்து பாதுகாப்பாக வாகனங்களில் எடுத்துச் செல்லப்பட்டு, திங்கள்நகரில் உள்ள வேளாண்மை விற்பனை கூட பாதுகாப்பு அறையில் வைத்து பூட்டி சீல் வைக்கப்பட்டது.