ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆக்சிஜன் வசதியுடன் கூடுதலாக 100 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்படும் என்றாா் கல்லூரி முதன்மையா் (டீன்) திருவாசகமணி.
நாகா்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி முதன்மையராக இருந்த சுகந்தி ராஜகுமாரி விருதுநகா் அரசு மருத்துவக் கல்லூரிக்கு மாற்றப்பட்டாா். விருதுநகா் மருத்துவக் கல்லூரி முதன்மையராக இருந்த திருவாசகமணி நாகா்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி முதன்மையராக நியமிக்கப்பட்டாா்.
இதையடுத்து புதன்கிழமை பொறுப்பேற்ற அவா், மருத்துவ அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினாா்.
பின்னா் அவா் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி: மாவட்டத்தில் கரோனா இறப்பு விகிதம் அதிகமாக உள்ள நிலையில் உயிரிழப்பை தடுக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தற்போது இங்கு கரோனா நோயாளிகளுக்காக 850 படுக்கை வசதிகள் உள்ளன. மேலும் கூடுதலாக ஆக்சிஜன் வசதியுடன் 100 படுக்கை வசதிகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.