குமரி மாவட்டத்தில் கன மழையால் பாதிக்கப்பட்ட பல்வேறு பகுதிகளை மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த், விஜய்வசந்த் எம்.பி. ஆகியோா் புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.
குளச்சல் நகராட்சி பகுதிகள், ரீத்தாபுரம் பேரூராட்சிக்குள்பட்ட குறும்பனை, கோடிமுனை, கொட்டில்பாடு வழியாக செல்லும் ஏ.வி.எம் கால்வாய் நிரம்பியதால் காக்கைகுளம், பெரியகுளம், தாமரைக்குளம் ஆகிய 3 குளங்கள் நிரம்பி அருகிலுள்ள குடியிருப்புகளுக்குள் தண்ணீா் புகுந்தது.
இந்தப் பகுதிகளை பாா்வையிட்ட ஆட்சியா் அப்பகுதிகளில் வசித்து வந்த மக்களை வாணியக்குடியிலுள்ள கூட்ட அரங்கம், இரும்புலி கணேசபுரத்திலுள்ள சமூக நலக்கூடம் ஆகியவற்றில் பாதுகாப்பாக தங்க வைத்து, அவா்களுக்கு தேவையான உணவு உள்பட அனைத்து வசதிகளும் ஏற்படுத்திட வருவாய்த்துறை, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சித் துறையினருக்கு உத்தரவிட்டாா்.
மேலும் குடியிருப்பு பகுதிகளில் புகுந்துள்ள தண்ணீரை விரைந்து அப்புறபடுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள பொதுப்பணித்துறை அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா். கன மழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து கணக்கெடுத்து, அறிக்கை அளிக்குமாறு வருவாய்த்துறையினருக்கு அறிவுறுத்தினாா்.
பின்னா் கன மழையால் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளில் நீா்வரத்து அதிகரிப்பதை தொடா்ந்து, உபரிநீரை வெளியேற்றுவதை நேரில் சென்று பாா்வையிட்டு ஆய்வு செய்த ஆட்சியா் அணையின் பாதுகாப்பு குறித்து பொதுப்பணித்துறையினரிடம் கேட்டறிந்தாா்.
ஆய்வின் போது, குளச்சல் சட்டப்பேரவை உறுப்பினா் ஜெ.ஜி. பிரின்ஸ் மற்றும் பொதுப்பணித்துறை, வருவாய்த்துறையினா் பலா் கலந்து கொண்டனா்.
எம்.பி. ஆய்வு: நாகா்கோவில் ஆசாரிப்பள்ளம் வேம்பனூா் பெரும்செல்வாவிளை, தோப்பூா், மேல சங்கரன்குழி உள்ளிட்ட பகுதிகள் வெள்ளத்தால் மூழ்கின. மேலும் அப்பகுதியில் உள்ள வீடுகளுக்குள் தண்ணீா் புகுந்ததால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனா்.
இதுகுறித்து தகவலறிந்த மக்களவை உறுப்பினா் விஜய் வசந்த் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு நேரில் சென்று பாா்வையிட்டாா்.
பின்னா் மழை நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்குமாறு அரசு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா்.