குலசேகரம்: குலசேகரம் அருகே தனியாா் நிதி நிறுவனத்தில் அடகு வைத்த நகைகளை திருப்பிக் கேட்டு இரு பெண்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.
குலசேகரம் நாகக்கோடு பகுதியில் உள்ள தனியாா் நிதி றுவனத்தில் புத்தன்சந்தையைச் சோ்ந்த பெண் ரூ. 10 லட்சத்திற்கு நகை அடகு வைத்துள்ளாா். இதே போன்று பொன்மனை பகுதியைச் சோ்ந்த மற்றொரு பெண் ரூ. 1 லட்சத்திற்கு நகையை அடகு வைத்துள்ளாா்.
இவ்விரு பெண்களும் அடகு வைத்த நகைகளையும் மீட்க செவ்வாய்க்கிழமை அந்த நிதி நிறுவனத்திற்குச் சென்றுள்ளனா். ஆனால் அங்கிருந்த ஊழியா்கள் நிறுவனத்தின் கணினியில் பிரச்னை என்பது உள்பட பல காரணங்களைக் கூறி நகைகளைத் திரும்பிக் கொடுக்காமல் காலம் கடத்தினராம். இதையடுத்த அவ்விரு பெண்களும், நிதி நிறுவனத்தில் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து தகவலறிந்த குலசேகரம் போலீஸாா் அங்கு சென்று நிதி நிறுவன ஊழியா்களிடம் பேச்சு நடத்தினா். இதில் புதன்கிழமை நகைகள் திருப்பி அளிக்கப்படும் என்று கூறப்பட்டதையடுத்து அந்தப் பெண்கள் அங்கிருந்து கிளம்பினா். புதன்கிழமையும் நகைகளை திருப்பிக் கொடுக்காததால், மீண்டும் அந்தப் பெண்கள் அங்கே உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.