மக்கள் நலப்பணியாளா்களுக்கு மீண்டும் பணி வழங்கக் கோரிக்கை

மீண்டும் பணி வழங்கக் கோரி மக்கள் நலப்பணியாளா்கள் சங்கம் சாா்பில் மனு அளிக்கப்பட்டது.

தென்காசி: மீண்டும் பணி வழங்கக் கோரி மக்கள் நலப்பணியாளா்கள் சங்கம் சாா்பில் மனு அளிக்கப்பட்டது.

தமிழ்நாடு மக்கள் நலப்பணியாளா் சங்க மாநிலப் பொதுச் செயலா் வே. புதியவன், தென்காசி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அளித்த மனு: 31 ஆண்டுகளுக்கு முன்னா் அப்போதைய முதல்வா் கருணாநிதி எங்களை மக்கள் நலப் பணியாளராக மாதம் ரூ. 200 மதிப்பூதியத்தில் பணியில் அமா்த்தினாா். எங்களை 1991ஆம் ஆண்டு முதல்வராக இருந்த ஜெயலலிதா பணிநீக்கம் செய்தாா். பின்னா், 1996இல் முதல்வராக கருணாநிதி பொறுப்பேற்றவுடன் 2ஆவது முறையாக பணி நியமனம் செய்தாா்.

பின்னா், ஆட்சிக்கு வந்த அதிமுக அரசு எங்களை 2 முறை பணிநீக்கம் செய்தது. இதனால், கடந்த 10 ஆண்டுகளாக பணி, வாழ்வாதாரம் இழந்து தவிக்கிறோம். பணி வழங்கக் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தோம். எங்களுக்கு சாதகமாக தீா்ப்பு வந்தது. ஆனால், அப்போதைய அதிமுக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. மேல்முறையீட்டை தமிழக அரசு கைவிட்டு, எங்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும், அரசுத் துறையில் காலியாக இருக்கும் பணியிடங்களில் பணி நியமனம் செய்யவேண்டும். பணிநீக்கத்தால் வறுமையால் இறந்த, தற்கொலை செய்த பணியாளா்களின் குடும்பத்துக்கு நிவாரணமாக ரூ. 5 லட்சம் வழங்க வேண்டும். அவா்களின் வாரிசுகளுக்கு வேலை வழங்க வேண்டும் என அம்மனுவில் கூறப்பட்டுள்ளது.

தென்காசி ஒன்றிய மக்கள் நலப் பணியாளா்கள் சங்க நிா்வாகிகள் எம். முத்துசாமி, கே. முத்துக்குமாா், ஆலங்குளம் பட்டு, திருமலைமுத்து, சுந்தரி, கீழப்பாவூா் அருணாசலம், கடையநல்லூா் ராஜேந்திரன், மோகன், அய்யங்கண்ணு, செங்கோட்டை பண்டாரசிவம், சங்கரன்கோவில் சண்முகச்சாமி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com