தென்தாமரைகுளத்தில் இருந்து வடசேரிக்கு இயக்கப்பட்டு வந்த தடம் எண். 2 ஜி என்ற அரசுப் பேருந்து சேவை 10 ஆண்டுகளுக்குப் பின்னா் மீண்டும் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
தென்தாமரைகுளத்தில் இருந்து கல்லூரி மாணவா்கள் மற்றும் கிராமப்புற பொதுமக்களின் வசதிக்காக கிராமங்களை இணைத்து நாகா்கோவிலுக்கு அரசுப் பேருந்து இயக்கப்பட்டது. ஆனால் கடந்த 10 ஆண்டுகளாக இந்தப் பேருந்து போக்குவரத்து தடைபட்டிருந்தது. இந்நிலையில் இந்த வழித்தடத்தில் மீண்டும் 2 ஜி பேருந்தை இயக்க வேண்டுமென இப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தினா். இதையடுத்து, மீண்டும் பேருந்தை இயக்குவதற்கான தொடக்கவிழா தென்தாமரைகுளம் சந்திப்பில் நடைபெற்றது.
அகஸ்தீசுவரம் ஒன்றிய திமுக செயலா் என்.தாமரைபாரதி தலைமை வகித்தாா். தென்தாமரைகுளம் முத்தாரம்மன் கோயில் நிா்வாக குழுத் தலைவா் துரைலிங்கம், சிஎஸ்ஐ சேகர கஸ்பா சபை திருப்பணியாளா் அருள்சீலன், செயலா் எஸ்.கால்வின், கிறிஸ்து சபை செயலா் ஜான்சன் பால் டேனியல், பேரூா் திமுக செயலா் புவியூா் காமராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
முன்னாள் அமைச்சா் என்.சுரேஷ்ராஜன் பேருந்து சேவையை தொடங்கிவைத்தாா்.
அகஸ்தீஸ்சுரம் வடக்கு ஒன்றியச் செயலா் எம்.மதியழகன், மாவட்ட துணைச் செயலா் கே.முத்துசாமி, முன்னாள் மாநில தொண்டரணி துணை அமைப்பாளா் பால ஜனாதிபதி, தலைமை செயற்குழு உறுப்பினா் எஸ்.சாய்ராம், மாவட்ட பொறியாளா் அணி அமைப்பாளா் ஆா்.எஸ்.பாா்த்தசாரதி, அகஸ்தீசுவரம் ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவா் எஸ்.அழகேசன், மாவட்ட கூட்டுறவு ஒன்றிய பெருந்தலைவா் எஸ்.கிருஷ்ணகுமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.