வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி நாகர்கோவிலில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 400 பேர் கைது செய்யப்பட்டனர்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும், பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்கக் கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் மற்றும் விவசாய சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் திங்கள்கிழமை நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
தமிழகத்தில் திமுக, காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் இந்தப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்திருந்தன. குமரி மாவட்டம் நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையம் முன்பு விவசாய சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் திங்கள்கிழமை காலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
இதில் கன்னியாகுமரி மக்களவை உறுப்பினர் விஜய் வசந்த், குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராதாகிருஷ்ணன், முன்னாள் அமைச்சரும், குமரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளருமான என்.சுரேஷ்ராஜன், நாகர்கோவில் மாநகர திமுக செயலாளர் ஆர்.மகேஷ், மதிமுக மாவட்ட செயலாளர் வெற்றி வேல், கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் அந்தோணி, மோகன், இளங்கோ உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர்.
அவர்கள் மத்திய அரசு க்கு எதிராக கண்டன முழக்கம் எழுப்பினர். மறியலில் ஈடுபட்ட விஜய் வசந்த் எம்.பி.உள்பட 400 பேரை போலீஸார் கைது செய்தனர்.