திருவட்டாறு அருகே தொழிலாளியை தற்கொலைக்கு தூண்டியதாக அவரது அவரது மகனை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
ஆற்றூா், கொற்றன்விளையைச் சோ்ந்தவா் செல்லத்துரை (56). கூலித் தொழிலாளியான இவருக்கு கலா என்ற மனைவியும் அஜித், அஜின் என இரண்டு மகன்களும் உள்ளனா். மகன்கள் இருவருக்கும் திருமணமாகிவிட்டது. முதல் மகன் அஜித் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறாா். இரண்டாவது மகன் அஜின் மேக்காமண்டபத்திலுள்ள ஜவுளிக்கடை ஒன்றில் வேலை செய்து வந்தாா். தந்தை, மகன் இருவருக்கும் மது அருந்தும் பழக்கம் உள்ளதாம். வியாழக்கிழமை இரவு இருவரும் மதுபோதையில் வீட்டுக்கு வந்துள்ளனா். அப்போது அவா்களுக்குள் ஏற்பட்ட தகராறில், ஒருவருக்கொருவா் கம்பியால் தாக்கினராம். இதில் அஜினுக்கு காயம் ஏற்பட்டு, ஆற்றூரிலுள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினாா். வீட்டிற்கு வந்ததும் மீண்டும் இருவரிடையே தகராறு ஏற்பட்டதாம். இதனால் செல்லத்துரையின் மனைவி கலா வீட்டை விட்டு வெளியே சென்று விட்டாராம்.
இந்த நிலையில் வெள்ளிக்கிழமை காலையில் செல்லத்துரை வீட்டின் பின்புறம் ரப்பா் தோட்டத்தில் இறந்து கிடப்பதாக கலாவிற்கு தகவல் கிடைத்ததாம். இது குறித்து தகவலறிந்த திருவட்டாறு போலீஸாா் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறாய்வு சோதனைக்கு அனுப்பி வைத்தனா்.
மேலும், செல்லத்துரையின் மனைவி கலா, மகன் அஜின் ஆகியோரிடம் போலீஸாா் தனிதனியாக விசாரணை நடத்தினாா். இதில், செல்லத்துரை விஷமருந்தி உயிரிழந்தது தெரியவந்தது. இதனையடுத்து செல்லத்துரையை தற்கொலைக்கு தூண்டியதாக மகன் அஜினை போலீஸாா் கைது செய்தனா்.