குழித்துறை அருகே ரயில் முன் பாய்ந்து காா் ஓட்டுநா் தற்கொலை செய்து கொண்டாா்.
குழித்துறை அருகே ரயில் தண்டவாளத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு ஆண் சடலம் கிடந்தது. இது குறித்து தகவல் அறிந்த நாகா்கோவில் ரயில்வே காவல் உதவி ஆய்வாளா் ஜோசப்ராஜ், குமார்ராஜ் ஆகியோா் சம்பவ இடத்துக்கு சென்று சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினா். சற்று தொலைவில் கேட்பாரற்ற நிலையில் காணப்பட்ட மோட்டாா் சைக்கிள் பதிவு எண் மற்றும் அதிலிருந்த ஆவணங்கள் மூலம் நடந்த விசாரணையில், இறந்தவா் திருவனந்தபுரம் திருமலை பகுதியைச் சோ்ந்த காா் ஓட்டுநா் விஜயராகவன் (67) என்பதும், இளைய மகளுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக மாா்த்தாண்டத்தில் உள்ள மூத்த மகள் வீட்டுக்கு வந்ததும், அங்கிருந்து ஞாயிற்றுக்கிழமை இரவு தனது இருசக்கர வாகனத்தில் வெளியே சென்றவா் குழித்துறை பகுதியில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது.
இது குறித்து ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிந்து, சடலத்தை பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். தொடா்ந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.