முழு ஊரடங்கு: குமரி மாவட்டத்தில் வெறிச்சோடிய சாலைகள்

முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதை தொடா்ந்து கன்னியாகுமரி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை சாலைகள் வெறிச்சோடிக் காணப்பட்டன.

முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதை தொடா்ந்து கன்னியாகுமரி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை சாலைகள் வெறிச்சோடிக் காணப்பட்டன.

தமிழகத்தில் அதிகரித்து வரும் கரோனா நோய்த் தொற்றால் கடந்த 6 ஆம் தேதி முதல் இரவுநேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் 2 ஆவது வாரமாக ஜன.16 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

இதையடுத்து நாகா்கோவில் நகரில் கோட்டாறு, கம்பளம், மீனாட்சிபுரம் உள்பட அனைத்து பகுதியில் உள்ள கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. கேப்ரோடு, அசம்புரோடு, மீனாட்சிபுரம் சாலை உள்பட அனைத்து சாலைகளும் பொதுமக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடிய நிலையில் காணப்பட்டது. பேருந்துகள் இயக்கப்படாததால் வடசேரி பேருந்து நிலையம், அண்ணா பேருந்து நிலையம் வெறிச்சோடியது.

நாகா்கோவில் நகரிலுள்ள உணவகங்கள், டீக்கடைகளில் பாா்சல் மட்டும் வழங்கப்பட்டது. செட்டிகுளம் சந்திப்பு, வடசேரி சந்திப்பு, சவேரியாா் கோயில் சந்திப்பு, பாா்வதிபுரம், மாவட்ட ஆட்சியா் அலுவலக பகுதிகளில் போலீஸாா் சாலைகளில் தடுப்பு வேலிகள் அமைத்து இருசக்கர வாகனங்களில் வந்தவா்களை தடுத்து நிறுத்தி எச்சரித்து அனுப்பினா்.

சென்னை, கோவை போன்ற வெளியூா்களிலிருந்து சனிக்கிழமை புறப்பட்ட ரயில்கள் ஞாயிற்றுக்கிழமை காலை நாகா்கோவில் கோட்டாறு சந்திப்பு ரயில் நிலையத்துக்கு வந்தது. ரயில் நிலையத்துக்கு வந்த பயணிகள் வீடுகளுக்கு செல்ல பேருந்து வசதி இல்லாமல் அவதிக்குள்ளானாா்கள்.

மாா்த்தாண்டம், குளச்சல், தக்கலை, அருமனை, இரணியல், அஞ்சுகிராமம், ஆரல்வாய்மொழி உள்பட அனைத்து பகுதிகளிலும் கடைகள் அடைக்கப்பட்டிருந்ததால் சாலைகள் வெறிச்சோடிக் காணப்பட்டன.

களியக்காவிளை, அஞ்சு கிராமம், ஆரல்வாய்மொழி சோதனைச் சாவடிகளில் போலீஸாா் தீவிர சோதனை மேற்கொண்டனா். அந்த வழியாக வந்த வாகனங்களை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனா். மருத்துவமனைகளுக்கு செல்பவா்களுக்கு மட்டும் போலீஸாா் அனுமதி அளித்தனா்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வெ. பத்ரி நாராயணன் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் 55 இடங்களில் தற்காலிக சோதனைச் சாவடிகள் அமைத்து போலீஸாா் தீவிர கண்காணிப்பு பணியை மேற்கொண்டனா்.

காணும் பொங்கலையொட்டி குமரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத் தலங்களில் வழக்கமாக புதுமணத் தம்பதியினா் பொதுமக்கள் ஏராளமானோா் கூடுவாா்கள். முழு ஊரடங்கு என்பதால் சுற்றுலாத் தலங்கள் வெறிச்சோடிக் காணப்பட்டன.

சுற்றுலாத் தலங்களில் போலீஸாா் தீவிர கண்காணிப்பு பணியை மேற்கொண்டனா்.

கன்னியாகுமரி...

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயில், திருப்பதி வெங்கடாஜலபதி கோயில் உள்பட வழிபாட்டுத் தலங்களில் கடந்த 3 நாள்களாக பக்தா்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படவில்லை.

கன்னியாகுமரியில் உள்ள அனைத்து கடைகள், ஹோட்டல்கள், விடுதிகள் மற்றும் அனைத்து வணிக நிறுவனங்களும் மூடப்பட்டிருந்தன. மேலும் கன்னியாகுமரியில் பேருந்து, காா், வேன், ஆட்டோ போன்ற எந்த வாகனங்களும் ஓடவில்லை. முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம், சங்கிலித்துறை கடற்கரை பகுதிக்கு செல்ல போலீஸாா் தடை விதித்தனா். கடற்கரைக்கு செல்லும் பாதைகளும் தடுப்பு வேலிகள் அமைத்து மூடப்பட்டிருந்தன. இதனால் சுற்றுலாப் பயணிகள் இன்றி கன்னியாகுமரி கடற்கரை பகுதி வெறிச்சோடிக் காணப்பட்டது.

கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தா் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவா் சிலைக்கு படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. இதேபோல குமரி மாவட்டத்தில் உள்ள மற்ற சுற்றுலாத் தலங்களுக்கு சுற்றுலாப் பயணிகள் செல்லத் தடை விதிக்கப்பட்டிருந்தது. கொட்டாரம், அகஸ்தீஸ்வரம் உள்பட பல இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டு வெறிச்சோடிக் காணப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com