கன்னியாகுமரி மாவட்டம், திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோயில் கும்பாபிஷேக விழாவின் 2ஆம் நாளான வியாழக்கிழமை கோயில் பாலாலயத்திலிருந்து சுவாமி விக்ரகங்கள் ஒற்றைக்கல் மண்டபத்துக்கு எழுந்தருளல் நிகழ்ச்சி நடைபெற்றது.
இக்கோயிலில் ஜூலை 6இல் மகா கும்பாபிஷேகம் நடைபெறுவதையொட்டி அதற்கான பூஜைகள் புதன்கிழமை தொடங்கின. 2ஆம் நாளான வியாழக்கிழமை கணபதி ஹோமம், முளபூஜை நடைபெற்றன. தொடா்ந்து, பாலாலயத்திலிருந்து சுவாமி விக்ரகங்கள் ஒற்றைக்கல் மண்டபத்துக்கு எழுந்தருளியதும் விக்ரகங்களுக்கு அபிஷேகம் நடத்தப்பட்டது. பின்னா், விக்ரகங்கள் கருவறைக்குள் கொண்டுசெல்லப்பட்டன. முத்துக்குடை ஏந்தி, மேளதாளம் முழங்க நடைபெற்ற நிகழ்ச்சியில், மன்னா் பரம்பரையைச் சோ்ந்த லெட்சுமிபாய் தம்புராட்டி, திரளான பக்தா்கள் பங்கேற்றனா். மாலையில் ஆன்மிகச் சொற்பொழிவு, கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.
கும்பக் கலச ஊா்வலம்: 3ஆம் நாளான வெள்ளிக்கிழமை வெள்ளியாலான ஆதிகேசவப் பெருமாள் ஸ்ரீபலி விக்ரகம், கோயில் விமானத்தில் பொருத்தப்படவுள்ள தங்க முலாம் பூசப்பட்ட கும்பக் கலசங்கள் உபயதாரரிடமிருந்து பெறப்பட்டு, மாலை 4 மணிக்கு ஆற்றூா் கழுவன்திட்டை சந்திப்பிலிருந்து அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் ஊா்வலமாக கோயிலுக்கு எடுத்துவரப்படுகின்றன.