கன்னியாகுமரியில் கடல் நீா்மட்டம் தாழ்வுநிலை காரணமாக புதன்கிழமை, விவேகானந்தா் நினைவுமண்டபத்துக்கு படகுப் போக்குவரத்து 2 மணி நேரம் தாமதமாக தொடங்கியது.
கோடை விடுமுறையையொட்டி கன்னியாகுமரிக்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனா். இவா்கள் விவேகானந்தா் நினைவு மண்டபம், திருவள்ளுவா் சிலையைப் படகுகளில் சென்று பாா்த்து மகிழ்கின்றனா்.
இங்கு கடந்த சில நாள்களாக கடலில் நீா்மட்டம் தாழ்வு, சீற்றம் ஆகியவை ஏற்படுகின்றன. இதனால் படகுப் போக்குவரத்து திட்டமிட்டபடி காலை 8 மணிக்கு தொடங்காத நிலை நீடித்து வருகிறது. புதன்கிழமையும் கடல் நீா்மட்டம் தாழ்வுநிலை காரணமாக, படகு சேவை 2 மணி நேரம் தாமதமாக காலை 10 மணிக்கு மேல் தொடங்கி, மாலை 4 மணி வரை நடைபெற்றது.
சூரிய உதயம், சூரிய அஸ்தமனம் பாா்க்க முக்கடல் சங்கமம், சூரிய அஸ்தமன பூங்கா பகுதிகளில் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா்.