நாகர்கோவில்: நாகர்கோவில் அருகே முன்னாள் ராணுவ வீரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
குமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள தேரூர் சங்கர் நகரைச் சேர்ந்தவர் ஜெயபிரகாஷ் (55). இவர் ராணுவத்தில் பணியாற்றி கடந்த 2014 ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார். இவரது மனைவி சாந்தி, இவர்களுக்கு ஒரே மகன் அவருக்கும் திருமணமாகிவிட்டது.
கடந்த சில ஆண்டுகளாக வங்கி ஏடிஎம் பாதுகாவலராக பணியாற்றி வந்தார். ஜெயபிரகாஷுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்தது. இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
இந்நிலையில், புதன் கிழமை காலை ஜெயபிரகாஷ் பணிக்கு புறப்பட்ட போது வழக்கம் போல் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் ஜெயபிரகாஷ் தன்னிடமிருந்த துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து தகவலறிந்த சுசீந்திரம் காவல்துறையினர், ஜெயபிரகாஷ் வீட்டுக்கு சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.