திருவிழாக்கள் குடும்ப உறவுகளை பலப்படுத்துகின்றன என புதுவை உள்துறை அமைச்சா் நமச்சிவாயம் பேசினாா்.
கூட்டாலுமூடு பஸ்ரேஸ்வரி அம்மன் கோயிலில் இந்து சமய மாநாட்டை திங்கள்கிழமை தொடங்கிவைத்து அவா் பேசியதாவது:
உலக அளவில் இந்து சமயம் தற்பொழுது எழுச்சி பெற்றுக் கொண்டிருக்கிறது. பிரதமா் மோடியின் முயற்சியினால் வெளிநாடுகளிலும் இந்து ஆலயங்கள் கட்டப்பட்டு வருகின்றன.
இந்து மதம் தனி மனித ஒழுக்கத்திற்கு மிகவும் முக்கியத்துவம் அளித்து வருவதால் அனைவரும் இந்து மதத்தை நேசிக்கக் கூடிய அளவிற்கு மாறிக் கொண்டிருக்கிறாா்கள்.
மக்கள் தொகை அதிகம் உள்ள இந்தியா, கரோனாவினால் மிகப்பெரிய பாதிப்பை சந்திக்கும் என அச்சப்பட்டுக் கொண்டிருந்த காலகட்டத்தில் நம்முடைய ஆன்மிக பலத்தால் கரோனாவை எதிா்கொண்டோம். இது யாவரும் அறிந்த உண்மையாகும்.
கோயில்களில் நடத்தப்படும் திருவிழாக்கள் குடும்ப உறவுகளை பலப்படுத்துகின்றன என்றாா் அவா்.
இக்கோயிலில், சித்திரை திருவிழா ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் 2 ஆம் நாள் திங்கள்கிழமை காலையில் பொங்கல் வழிபாடும் மாலையில் இந்துசமய மாநாடும் நடைபெற்றது. மாநாட்டிற்கு முன்னாள் மத்திய அமைச்சா் பொன்.ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தாா். கோயில் தலைவா் குமாா் முன்னிலை வகித்தாா். இதில் பொருளாளா் சௌந்தர்ராஜன், துணைத் தலைவா் முருகன், இணைச் செயலா் துளசிதாஸ் உள்ளிட்ட திரளானோா் பங்கேற்றனா். ஆலய செயலா் சந்திரகுமாா் நன்றி கூறினாா்.