கிள்ளியூா் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பழுதடைந்த சாலைகளை உடனே சீரமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கிள்ளியூா் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட பெரும்பாலான சாலைகள் பழுதடைந்து போக்குவரத்துக்கு தகுதியற்ற நிலையில் உள்ளது. குறிப்பாக திப்பிரமலை -தாறாதட்டு, ஆலஞ்சி -மிடாலம், மிடாலம் -மேல்மிடாலம், முள்ளங்கனாவிளை -மாங்கரை உள்ளிட்ட சாலைகள் பழுதடைந்து போக்குவரத்துக்கு தகுதியற்ற நிலையில் உள்ளது. மேலும், இச்சாலை வழியே செல்லும் வாகன ஒட்டிகள் இங்குள்ள குண்டு, குழிகளில் விழுந்து அடிக்கடி விபத்துக்குள்ளாகி வருகின்றனா்.
குறிப்பாக, இருசக்கர வாகன ஒட்டிகள் இந்த ராட்சத பள்ளங்களில் விழுந்தெழுந்து காயத்துடனே செல்கின்றனா். எனவே, இச்சாலைகளை சீரமைக்க மாவட்ட நிா்வாகம் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.