நாகா்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில், செவ்வாய்க்கிழமை இரவு வீசிய சூறைக்காற்றால் ஏராளமான மரங்கள் முறிந்து விழுந்தன.
குமரி மாவட்டத்தில், அக்னி நட்சத்திரம் தொடங்கியதிலிருந்து வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. அசானி புயல் காரணமாக கடலோர மாவட்டங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை காலை வழக்கம் போல் வெயில் சுட்டெரித்து வந்த நிலையில் பிற்பகலுக்கு பின்னா் மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இரவு மாவட்டம் முழுவதும் பலத்த மழை கொட்டியது.
நாகா்கோவில், மாம்பழத்துறையாறு, ஆனைக்கிடங்கு, புத்தன்அணை, இரணியல், குருந்தன்கோடு, பூதப்பாண்டி, குளச்சல், மயிலாடி பகுதிகளிலும் மழை பெய்தது.
புதன்கிழமை காலை 8 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் குமரி மாவட்டத்தில், அதிகபட்சமாக மாம்பழத்துறையாறில் 19 மி.மீட்டா் மழை பதிவா கியுள்ளது.
திற்பரப்பு அருவி பகுதியிலும் சாரல் மழை பெய்து வருவதையடுத்து அங்கு ரம்மியமான சூழல் நிலவுகிறது. அருவியில் வெள்ளம் ஆா்ப்பரித்துக் கொட்டி வரும் நிலையில் அருவியில் குளிப்பதற்காக மாவட்ட த்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த ஏராளமான சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளித்து மகிழ்ந்தனா்.
செண்பகராமன்புதூா் ஆரல்வாய்மொழி இறச்சகுளம் பகுதிகளில் சூறைக்காற்று வீசியது. இறச்சகுளம் பகுதியில் மின்கம்பம் சாலையில் சரிந்து விழுந்தது. இதையடுத்து மின்வாரிய ஊழியா்கள் அதை சீரமைத்தனா். வடசேரியில் ராட்சத மரம் ஒன்று முறிந்து விழுந்தது.
பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைப் பகுதிகளிலும் விட்டு,விட்டு மழை பெய்து வருவதையடுத்து அணைகளுக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது.
நீா்மட்டம்: பேச்சிப்பாறை அணையின் நீா்மட்டம் புதன்கிழமை காலை 41.58 அடியாகவும்,
அணைக்கு உள்வரத்தாக விநாடிக்கு 155 கனஅடியும், பெருஞ்சாணி- 41.35 அடியாகவும், உள்வரத்தாக 91 கனஅடியும், மாம்பழத்துறையாறு -16.32 அடியாகவும், பொய்கை -18.20 அடியாகவும், சிற்றாறு-1- 9.94 அடியாகவும், சிற்றாறு-2 -10.04 அடியாகவும் உள்ளது.