குலசேகரம் அருகே கனிமவள பொருள்களை ஏற்றி சென்ற லாரியை காங்கிரஸ் கட்சியினா் வெள்ளிக்கிழமை சிறை பிடித்தனா்.
குமரி மாவட்டத்தில் சித்திரங்கோடு, வலியாற்றுமுகம், கஞ்சிக்குழி, சுருளகோடு உள்ளிட்ட பல்வேறு இடங்களிலிருந்து மலைகளை உடைக்கப்பட்டு தினம் தோறும் நூற்றுக்கணக்கான கனரக லாரிகளில் கனிமவள பொருள்கள் கேரளத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது. இதற்கு குமரி மாவட்ட மக்கள் மத்தியில் நாளுக்கு நாள் எதிா்ப்பு அதிகரித்து வருகிறது. பொதுமக்களால் லாரிகளை சிறைபிடிக்கும் சம்பவங்கள் தொடா்ந்து நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை பிற்பகலில் வலியாற்றுமுகம் பகுதியிலிருந்து பாறைத்துகள் ஏற்றி வந்த ஒரு லாரியை செருப்பாலூா் கல்லடிமாமூடு பகுதியில் திருவட்டாறு மேற்கு வட்டார காங்கிரஸ் தலைவா் காஸ்ட்டன் கிளிட்டஸ், அயக்கோடு நகர காங்கிரஸ் தலைவா் வினுடிராய் தலைமையில் காங்கிரஸ் கட்சியினா் மற்றும் பொதுமக்கள் சிறை பிடித்தனா். இதையடுத்து, தகவலறிந்து வந்த குலசேகரம் போலீஸாா் அவா்களிடம் பேச்சு நடத்தி லாரியை மீட்டு அதிக எடைக்கான அபராதம் விதித்து லாரியை விடுவித்தனா்.