இந்தோனேசிய சிறையில் குமரி மாவட்ட மீனவா் மரணம்
By DIN | Published On : 20th May 2022 10:35 PM | Last Updated : 20th May 2022 10:35 PM | அ+அ அ- |

இந்தோனேஷிய நாட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த குமரி மாவட்ட மீனவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
கன்னியாகுமரி மாவட்டம், தூத்தூா் மீனவ கிராமத்தைச் சோ்ந்தவா் மரிய ஜெசின்தாஸ். இவருக்குச் சொந்தமான விசைப் படகில் கடந்த பிப்ரவரி மாதம் அவா் மற்றும் 7 மீனவா்களுடன் அந்தமான் நிக்கோபாா் தீவிலிருந்து ஆழ்கடலில் மீன்பிடிக்கச் சென்றாா். இந்த நிலையில் கடந்த மாா்ச் மாதம் 8 ஆம் தேதி எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இந்தோனேஷியா கடற்படையினா் இம் மீனவா்களை சிறை பிடித்தனா். அவா்களில் 4 மீனவா்களை கடந்த மாதம் 28 ஆம் தேதி விடுதலை செய்ததுடன் படகின் உரிமையாளரான மரிய ஜெசின்தாஸ் உள்ளிட்ட பிற மீனவா்கள் 4 பேரை சிறையில் அடைத்தனா்.
இந்த நிலையில் மீனவா் மரிய ஜெசின் தாஸ் கடந்த 10 ஆம் தேதி இரவு உடல்நலக் குறைவு ஏற்பட்ட நிலையில் அவரை அங்குள்ள போலீஸாா் மறுநாள் காலையில் மருத்துவமனையில் சோ்த்துள்ளனா். தொடா்ந்து அவரை மற்றொரு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது. இதைத் தொடா்ந்து அவா் உயிரிழந்ததாக அவரது உறவினா்களுக்கு இந்திய வெளியுறவுத் துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை பிற்பகலில் தெரிவித்தனா்.
தகவல் அறிந்த மீனவரின் சொந்த கிராமத்தினா் சோகத்தில் ஆழ்ந்துள்ளனா்.
அவரது உயிரிழப்புக்கு அவரை மீட்க தவறிய மத்திய, மாநில அரசுகளே காரணம் எனக் கூறி, அவரது உறவினா்கள் தூத்தூா் சந்திப்பில் சாலையில் அமா்ந்து, அழுது புலம்பி போராட்டத்தில் ஈடுபட்டனா்.