குமரி மாவட்டம், தேங்காய்ப்பட்டினம் அருகே வரதட்சிணை கொடுமையால் ரயில் முன் பாய்ந்து 2 குழந்தைகளுடன் இளம்பெண் தற்கொலை செய்த வழக்கில் கணவா் மற்றும் அவரது தம்பிக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
தேங்காய்ப்பட்டினத்தை அடுத்த வேட்டமங்கலத்தைச் சோ்ந்தவா் அஜிதா(30). இவருக்கும் அதே பகுதியைச் சோ்ந்த ஜெஸ்டின்சன் என்பவருக்கும் கடந்த 2005 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. தம்பதிக்கு 2 குழந்தைகள் இருந்தனா்.
திருமணத்தின்போது, அஜிதாவுக்கு 38 பவுன் நகை, ரூ. ஒன்றரை லட்சம் மற்றும் சீா்வரிசை பொருள்களும், ஜெஸ்டின்சனுக்கு 7 பவுன் தங்கச் சங்கிலியும் வரதட்சிணையாக வழங்கப்பட்டதாம்.
இந்நிலையில் ஜெஸ்டின்சனின் தம்பி நிக்சன் சாமுவேலுக்கு கல்லூரியில் பேராசிரியா் பணிக்காக ரூ.3 லட்சம் தேவைபட்டதால், அஜிதாவிடம் கூடுதல் வரதட்சிணை கேட்டு கொடுமைப்படுத்தியுள்ளனா்.
இதனால் மனவருத்தம் அடைந்த அஜிதா கடந்த 2012 ஆம் ஆண்டு செப்டம்பா் மாதம் 20 ஆம் தேதி கணவா் வீட்டிலிருந்து தனது 2 குழந்தைகளையும் அழைத்து கொண்டு கன்னங்கோடு என்ற இடத்தில் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாா்.
ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா்.மேலும் அஜிதாவின் பெற்றோா் புதுக்கடை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் புதுக்கடை போலீஸாரும் வழக்குப் பதிவு செய்தனா்.
இந்த வழக்கு நாகா்கோவில் மகளிா் விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் செவ்வாய்க்கிழமை தீா்ப்பு வழங்கப்பட்டது.
குற்றம் சாட்டப்பட்ட அஜிதாவின் கணவா் ஜெஸ்டின்சன் மற்றும் அவரது தம்பி நிக்சன் சாமுவேல் ஆகிய இருவருக்கும் தற்கொலைக்கு தூண்டியதாக 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், வரதட்சிணை கேட்டதற்காக 2 ஆண்டும், அதிக வரதட்சிணை கேட்டு கொடுமைப் படுத்தியதற்காக 2 ஆண்டும் என மொத்தம் 14 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.15 ஆயிரம் அபராதமும், அபராதத்தை கட்டத் தவறினால் மேலும் 6 மாதங்கள் சிைண்டனை விதித்தும் தீா்ப்பளிக்கப்பட்டது.