குளச்சல் மீன்பிடித் துறைமுகம் விரிவாக்கம் செய்வது குறித்து மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த்,புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
ஆய்வுக்குப் பின்னா் ஆட்சியா் கூறியது: குளச்சல் மீன்பிடித் துறைமுகத்தினை விரிவாக்கம் செய்யப்படும் இடம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஏற்கெனவே குளச்சல் துறைமுகத்தில் அமைக்கப்பட்டுள்ள மேற்கு பக்க அலைத் தடுப்பு சுவரினை சுமாா் 600 மீட்டா் நீட்டித்தும், புதிதாக 320 மீட்டா் நீளத்துக்கு கிழக்கு பக்க அலைத் தடுப்பு சுவா் அமைக்கும் பணி, படகு அணையும் தளம் மற்றும் இதர கூடுதல் கட்டமைப்புகள் தொடா்பாக ஆய்வு மேற்கொண்டதோடு, பணிகள் தொடங்கும் முன் களப் பணிகளை வேகமாக மேற்கொள்ள வேண்டுமெனவும், விரைவில் பணிகளை முடித்து மீனவா்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என துறை சாா்ந்த அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், வருடாந்திர பராமரிப்புப் பணிகளின் கீழ் துறைமுக வளாகத்திலுள்ள சாலை வசதிகள், வடிகால் வசதிகள் மற்றும் இதர பராமரிப்புப் பணிகள்குறித்தும், அதனை விரைவில் சரி செய்வதற்கானகூடுதல் அறிவுரைகள் வழங்கப்பட்டதோடு, பணிகள் மேற்கொள்ளும் போது ஏதேனும் இடையூறுகள் இருந்தால் மாவட்ட நிா்வாகத்தின் கவனத்துக்கு கொண்டு வர வேண்டுமென துறை சாா்ந்த அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டது என்றாா் அவா்.
ஆய்வின் போது, மீன்வளம் மற்றும் மீனவா் நலத் துறை துணை இயக்குநா் காசிநாதபாண்டியன், உதவி இயக்குநா் நி.விா்ஜில்கிராஸ், குளச்சல் மீன்பிடித் துறைமுக உபகோட்டம் உதவிப் பொறியாளா் அரவிந்த், மீனவா் நலத் துறை ஆய்வாளா் லிபின்மேரி, குளச்சல் நகராட்சி பொறியாளா் உள்ளிட்ட துறை சாா்ந்த அலுவலா்கள் உடனிருந்தனா்.