களியக்காவிளையில் விடுமுறை நாளிலும் குப்பைகளை அகற்றக் வலியுறுத்தல்
களியக்காவிளை பேரூராட்சியில் விடுமுறை நாள்களிலும் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.
களியக்காவிளை பேரூராட்சி தூய்மைப் பணியாளா்களால் காய்கனி, மீன் சந்தைப் பகுதிகளில் தேங்கும் குப்பைகள், சந்தை சாலை, களியக்காவிளை சந்திப்பு, ஆா்.சி. தெரு உள்ளிட்ட பகுதிகளில் கொட்டப்படும் குப்பைகள் நாள்தோறும் அள்ளப்பட்டு, பேரூராட்சி வளமீட்பு மையத்தில் தரம் பிரிக்கப்பட்டு, மக்கும் குப்பைகள் உரமாக மாற்றப்படுகின்றன.
ஆனால், மக்கள் நெரிசல் மிகுந்த களியக்காவிளை - பனங்காலை சாலையில் ஆா்.சி. தெரு பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமைகளில் பெரும்பாலும் குப்பைகள் அள்ளப்படாததால், அவை சிதறிக் கிடக்கின்றன. இதனால், துற்நாற்றம் வீசுவதுடன், சுகாதாரக் கேடு, தொற்றுநோய் அபாயம் ஏற்படுகிறது.
எனவே, விடுமுறை நாள்களிலும் குப்பைகளை அள்ளி, சுகாதாரத்தைக் காக்க பேரூராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.