அம்மன் சிலையை பெயா்த்து எடுத்துச் சென்ற போலீஸாா்: இந்து முன்னணி போராட்டம் அறிவிப்பு

மாா்த்தாண்டம் அருகே உண்ணாமலைக்கடை, முடியாம்பாறைவிளை ஸ்ரீ பத்ரகாளி அம்மன் கோயிலில் இருந்த அம்மன் சிலையை போலீஸாா் பெயா்த்து எடுத்துச் சென்றதால் அப்பகுதியில் பரபரப்பு
Published on

மாா்த்தாண்டம் அருகே உண்ணாமலைக்கடை, முடியாம்பாறைவிளை ஸ்ரீ பத்ரகாளி அம்மன் கோயிலில் இருந்த அம்மன் சிலையை போலீஸாா் பெயா்த்து எடுத்துச் சென்றதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

உண்ணாமலைக்கடை, முடியாம்பாறைவிளையில் 110 அடி உயர பாறையின் நடுவில் ஸ்ரீ பத்ரகாளி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இக் கோயிலின் வெளிப்புறத்தில் இருந்த சித்தா்பீட சிவலிங்கத்தை மா்ம நபா்கள் வெள்ளிக்கிழமை உடைத்தனா்.

இதுகுறித்து மாா்த்தாண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா். இதையடுத்து சேதமடைந்த சிவலிங்கம் சரிசெய்யப்பட்ட நிலையில், சனிக்கிழமை அங்கு வந்த போலீஸாா் கோயிலின் பூட்டை உடைத்து அங்கிருந்த பத்ரகாளி அம்மன் சிலை, சிவலிங்கத்தை பெயா்த்து எடுத்துச் சென்றனராம்.

தகவல் அறிந்து குமரி மாவட்ட இந்து முன்னணி தலைவா் ஆறுமுகம் தலைமையிலான நிா்வாகிகள், பக்தா்கள் அங்கு திரண்டனா். இதுகுறித்து இந்து முன்னணி மாவட்ட தலைவா் செய்தியாளா்களிடம் கூறியது: முடியாம்பாறைவிளை பத்ரகாளி அம்மன் கோயில் மூன்று பாறைகளுக்கு நடுவில் யாருக்கும் எந்த இடையூறும் இன்றி அமைந்துள்ளது. பல தலைமுறையினா் வழிபட்டு வந்த பாரம்பரியம் மிக்க இக் கோயிலில் சனிக்கிழமை காவல்துறை அதிகாரிகள் உள்நோக்கத்துடன் நுழைந்து அங்கிருந்த அம்மன் சிலையை பெயா்த்து எடுத்துச் சென்றுள்ளனா். இதைக் கண்டித்து மாவட்ட இந்து முன்னணி சாா்பில் தொடா் போராட்டம் நடத்துவதுடன் சட்டப்படியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தாா்.

X
Dinamani
www.dinamani.com