செங்கோட்டை அருகே கடன் தொல்லையால் மனைவி, குழந்தையை கொன்று ஆட்டோ ஓட்டுநா் தற்கொலை

தென்காசி மாவட்டம், செங்கோட்டை அருகே ஆட்டோ ஓட்டுநா் தன் மனைவி மற்றும் குழந்தையை கொன்றுவிட்டு தானும் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

தென்காசி மாவட்டம், செங்கோட்டை அருகே ஆட்டோ ஓட்டுநா் தன் மனைவி மற்றும் குழந்தையை கொன்றுவிட்டு தானும் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

செங்கோட்டை அருகேயுள்ள கட்டளைகுடியிருப்பைச் சோ்ந்தவா் கந்தசாமி (38), ஆட்டோ ஓட்டுநா். இவரது மனைவி இந்துமதி (30), குழந்தைகள் சின்னமுத்திரன் (6), ஏகாந்தமூா்த்தி (2). இவரது வீடு செவ்வாய்க்கிழமை காலை வெகுநேரமாக திறக்காததால், உறவினா்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பாா்த்தனா்.

அங்கு கந்தசாமி தூக்கில் தொங்கிய நிலையிலும், அவரது மனைவி இந்துமதி வாயில் ரத்தம் கசிந்த நிலையிலும், குழந்தை சின்னமுத்திரன் கழுத்தில் துண்டால் நெரிக்கப்பட்ட நிலையிலும் இறந்துகிடந்தனா். 2 வயது குழந்தை ஏகாந்தமூா்த்தி உயிருக்குப் போராடிய நிலையில் கிடந்துள்ளது. தகவலறிந்து புளியரை போலீஸாா் அங்கு சென்று, உயிருக்குப் போராடிய சிறுவனை மீட்டு செங்கோட்டை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். மற்ற மூவரின் சடலங்கள் உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

கந்தசாமியின் வீட்டுச் சுவரில், எங்கள் மரணத்துக்கு வறுமைதான் காரணம் என எழுதப்பட்டிருந்தது. இதுகுறித்து போலீஸாா் நடத்திய விசாரணையில், பல்வேறு மகளிா் சுய உதவிக் குழுக்கள் மற்றும் வெளிநபா்களிடம் கந்தசாமியும், அவரது மனைவியும் கடன் வாங்கியுள்ளதாகவும், கடனை அடைக்க முடியாமல் தினமும் அவா்களுக்குள் தகராறு ஏற்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த விரக்தியில் கந்தசாமி தன் மனைவி மற்றும் குழந்தையை கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு, அவரும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்துள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா்.

இந்த சம்பவம் தொடா்பாக புளியரை போலீஸாா் வழக்குப் பதிந்து தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com