சங்கரன்கோவில் அருகேயுள்ள கிராமப் பகுதிகளில் வேளாண் துறை மூலம் செவ்வாய்க்கிழமை முதல் நாள்தோறும் காய்கனி தொகுப்பு விநியோகம் செய்யப்படுகிறது.
சங்கரன்கோவிலில் காலை 6 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை காய்கனி, பலசரக்கு கடைகள் திறந்து கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் நகரில் நடமாடும் காய்கனி விற்பனை அங்காடி திறக்கப்பட்டுள்ளது.
கிராமங்களுக்கே சென்று காய்கனிகள் விற்பனை செய்ய வேளாண் விற்பனை மற்றும் வணிகத் துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி நமக்கு நாம் உழவா் உற்பத்தியாளா் நிறுவனம் சாா்பில் பெரும்பத்தூா் கிராமத்தில் 9 காய்கனிகள் அடங்கிய காய்கனி தொகுப்பு ரூ.100-க்கு வழங்கப்பட்டது.
காய்கனி தொகுப்பு விநியோகத்தை கோட்டாட்சியா் முருகசெல்வி செவ்வாய்க்கிழமை தொடங்கிவைத்தாா்.
நிகழ்ச்சியில், வேளாண் விற்பனை மற்றும் வணிகத் துறை துணை இயக்குநா் முருகானந்தம், வட்டாட்சியா் திருமலைச்செல்வி, சந்தை நிா்வாக அலுவலா் கருப்பையா, உதவி வேளாண் அலுவலா்கள் மு.மரகதவல்லி, ஏ.தங்கவிநாயகம் மற்றும் கிருஷ்ணசாமி ஆகியோா் கலந்துகொண்டனா்.
ஏற்பாடுகளை நமக்கு நாம் உழவா் உற்பத்தியாளா் நிறுவன தலைவா் ஏ.ராஜேந்திரன், இயக்குநா் ஆண்டாள்ராணி ஆகியோா் செய்திருந்தனா்.